Wednesday, October 30, 2013

மப்பும் மந்தாரமும்.., கொப்பும் குலையுமாய்..,

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன், கூடுதலாய் சில ஆண்டுகளுக்கு முன் என்றும் கூட சொல்லலாம்.  தமிழ்நாட்டில் மது பற்றிய ஒரு எண்ணம், கசப்பாய், இனிப்பாய், புளிப்பாய் என்று கூட சொல்லலாம். நாம் பதின்ம வயதில் காலடி எடுத்து வைத்திருந்த கால கட்டம்.., 

சூப்பர் ஹீரோவாய் எதுவும் செய்ய முடியாவிட்டாலும் சூப்பர் ஹீரோ செயல் செய்பவர்களை சுற்றி, அவர்களது பிரதான அடிபொடிகளாய் நம்மை அடையாளப் படுத்திக் கொண்டிருந்த காலம் அது.

அப்போதெல்லாம் தெருவிக்கு ஓரிரு வீடுகளில் டி.வி. இருக்கும் ஓரிரு வீடுகளில் டிவிஎஸ் 50 இருக்கும். சில ஊர்களிலெல்லாம் தெருவே ஒன்றிரண்டுதான் இருக்கும்.  அப்படிப் பட்ட கால கட்டம். 

மலிவு விலை மதுக்கடைகள் அப்போது அங்காங்கே இருந்ததுண்டு. பாக்கெட், இப்போது ஆங்காங்கே விற்கும் தண்ணீர் பாக்கெட் வடிவில் இருக்கும். ரூ2 அல்லது 3 என்று நினைக்கிறேன். நான் வாங்கியதெல்லாம் கிடையாது. பிற்காலத்தில் எனக்கு கிடைத்த பொது அறிவுத் தகவல்கள் அவை.

அப்போதெல்லாம் ஊரில் சில சலம்பல் பார்டிகள் மட்டும் தண்ணி அடிப்பார்கள்.  அடித்துவிட்டு தெரு முக்கு வரை சலம்பல்கள் பறக்கும். ஊரின் நுனி வந்த உடன் அப்படியே பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார்கள். அப்படியே ஒரு ஓரமாய் நடந்துபோய் வீட்டில் அடங்கி விடுவார்கள். சில ஆட்கள் மட்டும் தண்ணி போட்டு விட்டு வந்து மனைவியை அடிப்பது உண்டு. அவர்களை எல்லாம்  தெருவில் இருப்பவர்கள் கண்டபடி திட்டுவார்கள், பெரும்பாலும் முதுகுக்குப் பின் தான்.

வெகுசிலர் போதையில் சண்டை போடுவது உண்டு. வெகு சிலர் என்றால் மொத்த மக்கள் தொகையில் வெகுசிலர்.  இன்று யோசித்துப் பார்த்தால் அவர்கள் போதை ஏற்றாவிட்டாலும்  சண்டைதான் போட்டிருப்பார்கள்.  

யோசித்துப்பார்த்தால் ஒரு ஒற்றுமை தெரிகிறது. அன்றைய தேதியில் மதுபோதையை நாடியவர்களை அவர்களது மக்கள், உறவினர்கள் பெரும்பாலும் வெறுத்துத்தான் இருக்கிறார்கள். மதுவை மட்டுமல்ல, மதுவின் நண்பர்களையும்தான்.


இன்றைய நிலையை யோசித்துப்பார்த்தால் மதுவால் ஏற்பட்ட படப்போகும் தீமைகள் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை.  ஆனால் மது மற்றும் மதுவின் உறவினர்களை வெறுக்கிறார்களா என்று பார்த்தால் , அப்படியெல்லாம் வெறுப்பவர்களாகத் தெரியவில்லை. நேற்று போதை அதிகமாகிவிட்டது என்பதை தேநீரில் இனிப்பு அதிகம் என்பது போல சொல்லுகிறார்கள். திரைப்படங்களைப் பார்த்தாலே இது நன்றாக விளங்கும். மது மயக்கத்தில் பாடுவதுபோல ஒரு பாடல் கண்டிப்பாக இடம்பெற்றுவிடுகிறது.  புகை பிடிப்பவர் ஒரு ஓரமாய் இருந்தால்கூட எச்சரிக்கை ஸ்லைடு போட்டு தெளிவாக்கி விடுகிறார்கள். 

மதுவை எதிர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால்

1.அரசியல்ரீதியாக நன்மைக்காக

2.சீர்திருத்தவாதியாக பெயர் எடுத்தவர்கள். இதிலும் சில புரட்சிவாதிகள் தன்னால் தண்ணி அடித்தால்தான் பேச எழுத முடியும் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.

3.இன்றுவரை மதுவிற்கு அடிமையாகாமல் இருந்து எங்கே தங்கள் வாரிசுகள், அதில் சிக்கிக் கொள்வார்களோ என்று என்ற பயத்தில் எதிர்ப்பவர்கள் என மிக குறுகிய சில் வட்டத்துக்குள் அடிக்கிவிட முடியும். 

தனது சக மாணவன் தண்ணி அடிப்பதால் அவனை வெறுக்கும் அல்லது அவனது சகஜமாக பழக மறுக்கும்  மாணவன், மாணவி இன்று உண்டா....,?  

மதுப் பழக்கம் உண்டு என்ற காரணத்திற்காக தனது காதலனை வெறுக்கும் காதலி, கணவனை வெறுக்கும் மனைவிகள் இன்று குறைந்து கொண்டே வருகிறார்கள். வீட்டில் சிக்கன் வறுத்துக் கொடுக்கும் இல்லத்தரசிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  எதிர்காலத்தில் இவர்களும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் காலம் வரலாம் என்றே தோன்றுகிறது.

குறுகிய காலத்தில் இதெல்லாம் நடந்து விடுமோ என்று தோன்றுகிறது. மதுவை வெறுக்கும் மனப் போக்கு குறைந்துகொண்டே வருகிறது என்பதாக உலகம் போய் கொண்டு இருக்கிறது.

இப்படி மப்பும் மந்தாரமாய் மக்கள் போய் கொண்டே இருந்தால் கொப்பும் குலையுமாக விபத்தில் மாட்டிக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகும். என்ன சொல்லி என்ன பிரயொசனம்?  மக்களிடையே மதுவிற்க்கான எதிர்ப்பை வளர்க்காத வரையில் மது ஒழிப்பு சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது .

Monday, October 14, 2013

சச்சினுக்குப் பின் டோனி?

இன்றைய விளையாட்டு வீரர்களில் மிக அதிகமாக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் டோனியும் ஒருவர். டோனியின் சரித்திரம் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது.

அதில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்கினது என்று டோனி பெறுமை பட்டுக் கொள்ள முடியாது. அதில் பலரும் செதுக்கி உள்ளனர், ஆனால் அவர் ஒரு குட் ஃபினிஷர்,  ஒவ்வொன்றையும் கடைசியில அவர் செதுக்கி விட்டிருக்கிறார்.  டோனியின் கீப்பர் வாழ்க்கை டிராவிட் என்ற பேட்ஸ்மேனால் ஒரு குச்சியும், பர்த்தீவ் பட்டீல் என்ற குழந்தைப் பையனால் ஒரு குச்சியும்  தினேஷ் கார்த்திக் என்ற கொடுத்துச் சிவந்த கரங்களால் மற்றொரு குச்சியும் நடப் பட்டு அதற்குப் பின்னால் துவங்கியது. இதில் யாராவது ஒருவர் காட்டடி மன்னனாக இருந்திருந்தால் டோனி வந்தே இருக்க முடியாது. எதைப் பற்றியும் கவலைப் படாமல் அடி பிண்ணிஎடுக்க ஆரம்பித்தார் டோனி. அப்படியே ஒரு அதிரடி ஆட்டக் காரராக கில் கிரிஸ்ட் பாணியில் உருவாக  அணியில் நுழைந்து விடுகிறார்.

அடுத்ததாக அவர் கேப்டன் ஆகிய கதை இன்னும் சுவாரசியமானது. உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டேன் என்ற நிலையில் உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி திரும்பி வர  எப்படியும் டி 20லும் தோற்று விடுவோம் என்றே எல்லோரும் நினைத்திருந்த நிலையில் கங்கூலி, டிராவிட், சச்சின் ஆகியோர் அணியிலிருந்து வெளியேறுகின்றனர். இளைஞர்களுக்கு வழி விடுவதாக கூறினார்கள்  நாமும் அதை அப்படியே நம்பி விட்டோம்.  டி20ல் கேப்டனாக சச்சினின் ஆசிர்வாதம் இருந்ததாகவும் சொல்வார்கள்.


அவர் சில முடிவுகளை எடுத்தார்.  அதை பலராலும் யூகிக்க முடியாத நிலையில் அவர் எடுத்த பல முடிவுகளில் வெற்றியும் பெற்றார்.


அப்போது கிரிக்கெட்டின் கடவுளாக சச்சினை அவரது ரசிகர்கள் முன்னிறுத்தி வந்தனர். அவரைப் பற்றி பல ஸ்டேடஸ்கள் போட்டு லைக்குகளையும்  பெற்று வந்தனர்.

அதே நேரத்தில் கிரிக்கெட்டில் கங்கூலி, டிராவிட், சேவக் போன்றவர்களும் இருந்தனர். அவர்களும் ரசிகர்கள் இருந்தனர்.  அவர்களில் பலரும் சச்சினின் சாதனைகளுக்கு தங்கள் தலைவனின்  சாதனைகள் சளைத்தவை அல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள்தான். அவர்களுக்கு சச்சின் மேல் கொஞ்சம் கோபம், பிரமிப்பு கூட உண்டு. தங்கள் தலைவனின் சாதனைகளை சிறியதாக்கிய சச்சினை கொஞ்சம் வெறுத்தர்வர்கள் கூட உண்டு.

ஆனால் சச்சினை அவர்கள் ரசிகர் தூக்கி கொண்டாடிய நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக தங்கள் ஆளின் சாதனைகளை காட்டலாம் என்றால் அவர்கள் ஏறக்குறைய ஓய்வு பெற்றிருந்தனர்.  அந்த நேரத்தில்தான் டோனி வருகிறார்.  டோனியின் ஃபேஸ்பு க்  ரசிகர்களைப் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்.  பெரும்பாலும் அவர்கள் ஏதாவது ஒரு விஷ்யத்தில் சச்சினை மட்டம் தட்டுவதிலே கவனம் செலுத்தி இருப்பார்கள்.


இப்படியான டோனி ரசிகர்கள்தான் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள். ஆபூர்வமாக உண்மையாக டோனி ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் ஃபேஸ் புக்கில் அடித்து ஆடும் பலரும் சச்சின் ரசிகர்களின் எதிர்ப்பாளர்களே.., சச்சின் ஓய்வு பெற்றுவிட்டால் அவர்களுக்கு போர் அடித்து விடும்.

எம்ஜியார் திரைப்படத்துறையை விட்டு விலகிய பின்னர் சிவாஜி படத்தைப் பார்ப்பதை குறைத்துக் கொண்ட சிவாஜி ரசிகர்கள்போல  ரஜினி திரைப் படத்துறையை விட்டு ஒதுங்கிய பின்னர் கமல் படங்களைப் பார்ப்பதை குறைத்துக் கொண்ட கமல் ரசிகர்கள் போல் சச்சினின் ஓய்விற்குப் பின் டோனியின் ஃபேஸ் புக் ரசிகர்களின் அதகள ஆட்டம் குறைந்துவிடும் என்றே தோன்றுகிறது.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails