Wednesday, September 14, 2016

நன்றி அமித் ஷாஜி

இந்த நாள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.  மகா சக்கரவர்த்தி மகாபலியின் வருகை உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. உண்மையில் மகாபலியின் வருகையை கேரளா தாண்டி கொண்டு சென்ற பெருமை அமித் ஷாவையே சேரும். 

மன்னன் மகாபலியின் பெருமையை வெறும் சடங்காக சம்பிரதாயமாக பாடிக் கொண்டிருந்த மக்களை உணர்ச்சிப் பூர்வமாக ஒவ்வொரும் பகிர்ந்து கொள்ளக் காரணமே அமிஷ் தான் அவர் போட்ட வாமன ஜெயந்தி போஸ்டர்தான்.  நம்ம ஊரில் பிள்ளை சதுர்த்தி திருவிழா போல வாமன ஜெயந்திக்குஅடி போட்ட போஸ்டரை எதிர்த்து கேரளாவே பொங்கிக் கொண்டு இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் நான் போட்ட பதிவு

வடக்கத்தியர் எதிர்க்கும் ஓணம் பண்டிகை

இன்று ஒவ்வொருவரும் மகாபலி பற்றிச் சொல்லுகிறார்கள். மகாபலி ஆட்சியில் பஞ்சம் இல்லை, பசி இல்லை, பட்டினி இல்லை, இள வயது மரணம் இல்லை, சாதி இல்லை. அனைத்து மக்களும் சாதி வேறுபாடு இன்றி சமத்துவத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறுகின்றனர். வந்துள்ளவர் தானம் என்று கேட்டால் எதையும் கொடுக்கும் மனதோடு வாழ்ந்து வந்திருக்கிறார்.  அவர் ஆட்சியில் யாரும் கெட்ட எண்ணத்துடன் தானம் கேட்டதில்லை.  வந்திருப்பவர் கபட வேடதாரி என்று  எச்சரிக்கப் பட்டும் தானம் கொடுக்க சம்மதிக்கிறான்.  

அவன் நாட்டில் பார்த்த முதல் வேட தாரி வாமனன்.  உள்ளன்றொரு வைத்து புறம் ஒன்று பேசும் முதல் நபர் வாமனன்.   

இன்று கேரளாவில் உள்ள ஒவ்வொரு ட்விட்டரும், முகநூலாரும் வாமன அவதாரத்தின் வஞ்சனையையும்  மகாபலியின் பெருமைகளையும் ஆரிய திராவிட வித்தியாசத்தையும் தெளிவாக ஆவணப் படுத்தி பேசுகிறார்கள்.  நேரில் பார்ப்பவர்களிடம் ஓணம் வாழ்த்துக்கள் என்று சொன்னாலே அவர்கள் மகாபலியின் பெருமை பேசி பதில் சொல்கிறார்கள்.

இப்படி ஓர் ஆரிய எதிர்ப்பு திராவிட வாழ்த்து சமீப காலத்தில் வந்ததே இல்லை. இப்படி ஒரு சூழல் வந்ததற்கு  அமித் ஷா அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

பின்குறிப்பு:- கேரள நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது இன்னொரு நண்பர் சொன்ன செய்தி, மகாபலிக்கு முற்பிறவி சாபமாம் அதனால்தான் வாமணன் அவரை பாதாள உலகம் அனுப்பினாராம்.

பின்குறிப்பு 2:-  வாமனனை வில்லனாக கொண்ட இந்த கதைக்கும் விஷ்ணுவை பெண்ணாக்கி அவருக்கு குழ்ந்தையையும் கொடுத்த கதைக்கும் ஏதாவது அரசியல் தொடர்ப்பு இருக்குமா?

பின்குறிப்பு 3:- நாம் ஏன் தீபாவளியைக் கூட  பூமாதேவியின் மகனான நரகாசுரனின் மீள் வருகை நாளாக மாற்றிக்கொண்டாடக் கூடாது?


Friday, September 9, 2016

பூவே உனக்காக அவசர ரீமேக்.

பூவே உனக்காக 1996ல் வந்த படம், நாங்கள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த காலம் அது நண்பர் கிரிஸ்டல் செந்திலுடன் பார்த்த விஷ்ணு படம்தான் கோயமுத்தூரில் எனது கணக்கை துவக்கியது என்ற வகையில்விஜய் நமக்கு நெருக்கமானவரே..,

பூவே உனக்காக வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் முகநூலில் எனது நண்பர் மகேஷ் குமார் இந்த படம் வராமல் இருந்திருந்தால் என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.

சற்றே இந்தக் கேள்வியை மாற்றி இந்தப் படம் இப்போது வந்திருந்தால் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வேளை இளைஞர்களை கவர்ந்திருந்தால், மனங்களை மாற்றி இருந்தால்.........

1. தான் காதலித்த பெண் தன்னைக் காதலிக்க வில்லை என்றாலும்கூட அவளது நல்வாழ்வுக்க்காக வே உழைப்பான்.

2. தனது காதலியைத் தவிர வேறெந்த பெண்ணையும் மனதாலும் நினைக்க மாட்டான்.

3.இது போன்ற இளைஞர்களின் மத்தியில் எந்த பெண்ணுமே பாதுகாப்பாக உணருவார்கள்.

4.மதம் தாண்டிய திருமணங்கள் இயல்பாக நடக்கலாம்.

5.மதம் தாண்டிய திருமணங்களுக்கு ஆதரவு தரும் இளைஞர்களும் அதிகரிக்கலாம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எஸ்.ஏ.சந்திர சேகரின் இயக்கத்தை விட்டு வெளி இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தபின் விஜயின் இரண்டாவதோ மூன்றாவதோ படம்தான் இது. ஏற்கனவே இதயம் படத்தில் காதலை மூக்கின் நுணியிலேயே வைத்திருந்து முரளி இதய நோயாளியாகி இருப்பார். காதல் படங்களின் துவக்கமாக அது இருந்த போதும் சரியான நாயகர்கள் இல்லாத சூழல் நிலவிய கால கட்டம்.  முரளியே சீனியர் நாயகர் ஆகியிருந்தார். இருந்தாலும் கூட அவர் கல்லூரி மாணவனாக 97ல் வெளிவந்த காலமெல்லாம் காதல் வாழ்கவில் வெற்றிக் கொடி கட்டியிருப்பார்.

கிராமத்திலிருந்து வரும் அப்பாவி இளைஞன் பாத்திரத்திற்கு சரியான தேர்வாக விஜய் அமைந்திருப்பார்.  அப்போது பல என்சினியரிங் கல்லூரிகள் துவங்கி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நகரை நோக்கி வந்து கொண்டிருந்த காலம் அது. தங்களைப் போன்ற எளிய தோற்றத்தில் இருந்த விஜயயை அவர்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டு விட்டனர்.  அதன் பிறகு விஜய்யும் அஜித்தும் விதவிதமாக காதலித்துக் கொண்டே இருந்தார்கள்.  அதன் பின்னர் பணக்கார பையன்களின் காதலும் படமானது.  விஜய் திருமலையானதும் அந்த இடத்தில் தனுஷ் போய் உட்கார்ந்து கொண்டார்.

டி.ஆர் சிலம்பரசனை தயாரித்தது போல எஸ்.ஏ.சி விஜயை தயாரித்திருந்தார்.  வித்தியாசம் என்னவென்றால் எஸ்.ஏ.சி கதை திரைக்கதை இயக்கம் இசையெல்லாம் விஜய்க்கு சொல்லித்தரவில்லை.  வித வித மாக காதலித்தே விஜய் அடுத்த தலைமுறையில் நம்பர் ஆகியிருந்தார்.

இந்த படம் வந்திருக்காவிட்டால் விஜய் முழுநேர ஆக்‌ஷன் ஹீரோவாக சங்கவி, யுவராணி போன்றவர்களை வைத்து தேவா, செந்தூரபாண்டி,செல்வா போன்ற  பல கிராமத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களை நடித்துக் கொடுத்திருப்பார்.  தெலுங்குப் படங்களை அப்படியே ரீமேக் கொடுத்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே வருங்கால முதல்வராக மாறியிருப்பார். தமிழக மக்களும் காதல் என்பது தொட்டபட்டா ரோட்டில் சாப்பிடும் முட்டை பரோட்டாவாக எண்ணியிருந்து இருப்பார்கள். காதல் தோல்விக்காக கொலை செய்வது, ஆளை வெட்டுவது, தற்கொலை செய்து கொள்வது போன்றெல்லாம் இல்லாமல்.  திரிஷா இல்லையென்றால் நயந்தாரா என்ற நிலைக்கு முதலிலேயே வந்திருப்பார்கள்.


ஆனால் இதயம், கோகுலம் மற்றும் இந்திக் காதல் படங்கள், மகுடமாக டைட்டானிக் (ஆங்கிலத்திலேயே கோவையில் 100நாள் ஓடியது)  போன்ற படங்கள் அணிவகுத்த நிலையில் சில வருடங்கள் தாமதமாகியிருந்தாலும் பூவே உனக்காக வந்தே இருக்கும். ஒருவேளை இப்போது இந்தப் படத்தை ரீமே செய்தால் இளைஞர்களின் காதல் உணர்வுகள் மொட்டு விட்டு மலர்ந்து வன்முறைகள் குறைந்தாலும் குறையலாம்.

வடக்கத்தியர் எதிர்க்கும் ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை ஒவ்வொரு வருடமும் கேரளத்தில் கொண்டாடப் படும் விமரிசையான பண்டிகை. தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் ஒருநாள் விடுப்பு விடும் அளவிற்கு எல்லோரும் கொண்டாடும் ஒரு பண்டிகை.

மகாபலி மன்னனை வாமன அவதாரம் எடுத்து மூன்றடி கேட்டு கதைமுடித்தார் விஷ்ணு என்பதுதான் கதை. அந்த மகாபலி மன்னன் தன்னுடைய நாட்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வருவதாகவும் மக்களுக்கு நல்லாசிகள் வழங்குவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. இன்றுவரை மக்களை அவரை அன்போடுதான் வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

மகாபலி மன்னனின் ஆட்சிச் சிறப்பை இந்த ஒரு பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Maveli nadu vaneedum kalam,
manusharellarum onnupole
amodhathode vasikkum kalam
apathangarkkumottillathanum.
adhikal vyadhikalonnumilla
balamaranangal kelppanilla
Dushtare kankondu kanmanilla
Nallavarallathe illa paaril..illa paaril
kallavum illa chathiyumilla
ellolamilla polivachanam
kallampparayum cherunazhiyum
kallatharangal mattonnumilla
Vellikolaadikal naazhikalum
Ellam kanakkinu thulyamaayi..thulyamaayi
When Maveli ruled the land,
All the people were equal-
Times when people were joyful and merry;
They were all free from harm.
There was neither anxiety nor sickness,
Deaths of children were unheard of,
No wicked person was in sight anywhere
All the people on the land were good.
There was neither theft nor deceit,
And no false words or promises.
Measures and weights were right;
There were no lies,
No one cheated or wronged his neighbor.
When Maveli ruled the land,
All the people formed one casteless race




 மகாபலி மன்னரின் ஆட்சியில் மக்கள் அனைவரும் சமமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திருக்கின்றனர். துன்பங்கள், துயரங்கள் நீங்கி வாழ்ந்திருக்கின்றனர். சிசு மரணம் அவன் ஆட்சியில் இல்லை. (இன்றும்கூட ஒரு நாட்டின் மருத்துவ வசதியினை தெரிந்துகொள்ள குழந்தைகள் மரணவிகிதத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றனர்.) அங்கு பொய், புரட்டு கிடையாது, ஏமாற்று கிடையாது.  சாதி வித்தியாசமற்ற ஒரு இனத்தை உருவாக்கி வாழ்கின்றனர் என்று இந்தப் பாடல் சொல்கிறது.


இவ்வளவு நல்லவரான மகாபலி சக்கரவர்த்தியினை  போரிட்டு ஜெயிக்க முடியாத விஷ்ணு மூன்றடி பிச்சை கேட்டு பாதாள உலகத்திற்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.   இந்தக் கதையில் எப்படிப் பார்த்தாலும் மகாபலிதான் ஹீரோ , விஷ்ணுதான் வில்லன்.

மகாபலியை கதை முடிப்பதற்கு பொறாமையைத்தவிர வேறு காரணம் தேடினாலும் கிடைக்கவில்லை.


இந்த கதைகளை, இது போன்ற பாடல்களை ஒவ்வொரு ஆண்டும் சொல்லிதான் கேரள மக்கள் தங்கள் மக்களை வளர்க்கிறார்கள். அதனால் கூட கேரளாவில் அதிக அளவில் இந்துக்கள் அல்லாத மக்கள் (பெரும்பாலும் மதம் மாறிய மக்கள்)  இருப்பதாகச் சொல்லலாம். இது போன்ற கதைகள் கேரளாவை விட்டு வெளியே சொல்லப் படுவது  பழம் நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாக வடநாட்டு பழமை வாதிகள் நினைக்கிறார்களாம். அதனால் ஓணம் பண்டிகை கேரளாவை விட்டு வெளியே கொண்டாடப் படுவதை அவர்கள் விரும்பவில்லையாம்.  


பின்னினைப்பு:- ஒருவேளை நரகாசுரன் கதையும் இப்படித்தானோ? 

பின்னிணைப்பு:- வாமன அவதாரத்திற்கு பிறகு அடுத்தடுத்த யுகங்களில்தான் ராம, கிருஷ்ண அவதாரங்கள் வருகின்றன. ஒருவேளை மகாபலி உயிருடன் இருந்தால்  அவர் உருவாக்கிய சாதி வித்தியாசம் அற்ற ஏற்ற தாழ்வற்ற சமுதாயம்தான் இருந்து இருக்குமா?

Monday, September 5, 2016

மினி, ஜெனி மற்றும் மலர் டீச்சர்

என் நண்பர்(மருத்துவர்) ஒருவர் சமீபத்தில் PG சேர்ந்தார். அவர் ட்ரீட் கொடுத்தார். நானும் என்னைப் போல சிலரும் கலந்து கொண்டோம். அவர் வாங்கியிருந்த மதிப்பெண்களுக்கு சிட்டி காலேஜே கிடைக்கும் என்ற நிலையில் அடுத்த நிலைக் கல்லூரியை எடுத்திருந்தார். அந்த ஊர் அவர் ஊருக்கு பக்கமும் அல்ல. காரணம் கேட்ட பொழுது அங்கதான் அந்த கோர்ஸ் நல்லா சொல்லித் தருவாங்கடா என்றார். நாங்களும் அதை நம்பி விட்டோம். சமீபத்தில் அந்த கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு நண்பரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் அந்தக் கல்லூரியில் இருக்கும் நண்பர்களைப் பற்றி பொதுவாகக் கேட்டோம். அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது.முதல் நண்பர் சேர்ந்திருக்கும் கல்லூரி , கோர்ஸ்ஸில் தான் அவரது கல்லூரிக் க்கால மினி, ஜெனி , இந்நாளில் மலர் டீச்சராக உதவிப் பேராராசியராக இருக்கிறாராம்...,
)
)
)
அடப் பக்கி இன்னும் சில வருஷம் பொருத்திருந்தீன்னா அந்த அம்மா chiefஆவே ஆகியிருக்குமேடா...,
நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Sunday, September 4, 2016

தர்ம துரை யின் மூன்று நாயகிகள்- ஓர் உள்ளார்ந்த பார்வை

தர்ம துரை நாயகிகளைப் பற்றி மட்டும் நாம் பார்ப்போம்.

முதலில் ஸ்டெல்லா,

தன்னை முதன்முதலாக தொட்டுத் தூக்கிய ஆண்மகனை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அவன் தன்னை நிராகரித்தது தெரிந்த பின்னர் தண்ணி போட்டுக் கொண்டு இரவில் ஹீரோவின் அறைக் கதவைத் தட்டுகிறார். ஹீரோ தன்னை வெறுக்கவில்லை என்பதை தொடர்ந்து ஹீரோவுடன் தொடர்ந்து பழகுகிறார். ஹீரோவின் நிழலாக இருக்கிறார். ஹீரோவுக்கு கஷ்டம் என்றவுடன் துடிக்கிறார். படிப்பு முடிந்த உடன் தன்னை வந்து பெண் கேட்குமாறு ஹீரோவுடன் சொல்கிறார். இந்த அனைத்து நிகழ்விலும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக சுபாஷிணி இருக்கிறார்.

அன்புச்செல்வி

ஹீரோ பயிற்சி பெறும் கிராம மருத்துவமனைக்கு கிராமத்து பாட்டிகளுடன் அவர்களுக்கு உதவியாக வருகிறார். அவரது தாயார் மருத்துவ வசதி இல்லாததால் மரணம் அடைந்ததால் பிறருடன் உதவிக்கு வருவதாகச் சொல்லுகிறார். பார்க்கும் அனைத்து ஆண்களையும் அண்ணே.., என்று அழைக்கிறார். இவரைப் பார்த்த உடன் ஹீரோவுக்கு பிடித்து விடுகிறது. ஊர் பெயர் விசாரித்து பெண் கேட்கிறார்.  ஹீரோவின் சாதிக்காரராக காட்டுகிறார்கள்.  பத்தாம் வகுப்பு படித்தவராக காட்டப் படுகிறார். ஆனால் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள் எழுதும் எழுத்தாளராக காட்டப் படுகிறார். தனது மாப்பிள்ளை என்று தெரிந்த உடன் ஹீரோவை மாமா என்று அழைக்க ஆரம்பித்து விடுகிறார்.திருமணம் நடக்காது என்ற சூழலில் தற்கொலை செய்து கொள்கிறார்.

முழுக்க முழுக்க தற்கால சிறுநகர, கிராமப்புற ஆண்களின் விருப்பமாக இருக்கிறார்.

புத்திசாலியாக இருக்க வேண்டும். ஆனால் பெரிய புத்திசாலியாக இருக்க கூடாது. பெரிதாக படித்திருக்க கூடாது.ஆனால் நாகரீகமாக இருக்க வேண்டும். நடுவகிடெடுத்து சீவி ஒற்றை சடை போட்டு புடவை கட்டி இருக்க வேண்டும். அனைவரையும் அண்ணனாக  நினைக்க வேண்டும். தன் ஒருவனை மட்டும் மாமாவாக பார்க்க வேண்டும். ஹீரோ விலகினால் தற்கொலை பண்ணிக் கொண்டு சாக வேண்டும்.

எதற்காக இந்தப் படைப்பு என்று தெரிய வில்லை. ஸ்டெல்லாவையே அவர் திருமணம் செய்து கொள்ள நினைத்து அது நடக்காமல் போனதால் ஹீரோ குடிகாரனாக சற்றே மனநிலை சிதறியவராக காட்டி இருக்கலாம். புதிதாக ஒரு பாத்திரம் ஏன் என்று தெரியவில்லை.

ஒரே காரணம் மட்டுமே தோன்றுகிறது. அன்புச் செல்வி அவரது சாதிக்காரர். ஸ்டெல்லா வேறு மதத்தவர். ஸ்டெல்லாவை அவரது சாதிக்காரர் மதத்துக் காரராகக் காட்டி இருந்தால் நிராகரிப்பு இருந்திருக்காது, கதை நகர்ந்திருக்காது. மதத்தின் காரணமாக நிராகரிப்பு என்பதை காட்ட விரும்பாத காரணத்தால் இயக்குநர் ஒரு புதிய கதா பாத்திரத்தை படைத்து சாக வைக்கிறார்.

மீண்டும் ஸ்டெல்லா

வீட்டிலிருந்து தப்பி ஓடும் மது அடிமை, மனநலம் பிறழ்ந்த ஹீரோ முதலில் ஸ்டெல்லாவை நாடிப் போகிறார். அங்கு ஸ்டெல்லா விபத்தில் இறந்ததாகச் சொல்லி விடுகிறார்கள்.  . அதாவது அன்புச் செல்வி, ஸ்டெல்லா இரண்டும் பாத்திரங்களும் இறந்து விடுவதாக காட்டப் படுவதாலேயே இரண்டும் ஒரே பாத்திரம் என்றும் இயக்குநர் சில பல காரணங்களுக்காக இரண்டு பாத்திரங்களையும் பிரித்து வைக்கிறார் என்பது புலப் படும்.

சுபாஷிணி

ஸ்டெல்லா இறந்தது தெரிந்த பின்னர் ஹீரோவின் பயணம் சுபாஷிணியைத் தேடி, சுபாஷிணி கணவனைப் பிரிந்து வாழ்கிறார். ஹீரோ சுபாஷிணியைச் சேர்ந்த உடன் மதுவிலிருந்து மீள ஆரம்பிக்கிறார். மனநலம் பெறுகிறார். சுபாஷிணியும் விவாகரத்து பெற்று விடுகிறார். விவாகரத்து வழக்கு முன்னரே துவங்கப் பட்ட ஒன்று என்று காட்டுகிறார்கள். சுபாஷிணியுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். சொந்தமாக கிளினிக் வைத்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.


ஹீரோ சுபாஷிணியை சேர்ந்த உடனேயே எல்லாமே சுபம் ஆகி விடுகிறது. சுபாஷிணியும் ஹீரோவுக்காகவே காத்திருந்தது போல இருக்கிறது. ஏதோ ஒரு முன் ஜென்ம பந்தம் தொடர்வது போல காட்டப் படுகிறது. அப்படி என்றால் கல்லூரியிலேயே  இருந்து இருக்க வேண்டுமே, ஆம் கலை நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து  perform செய்திருக்கிறார்கள்.  ஆனால் கல்லூரியில் ஏன் இருவருக்கும் அந்தக் காதல் வர வில்லை என்ற கேள்வி கேட்கும் போது மறைமுகமாக நமக்கே அந்தப் பதில் தோன்றுகிறது. ஸ்டெல்லாவும் சுபாஷிணியும் ஒருவரே..,  
ஹிரோ சுபாஷிணியை சேர்ந்து விடுவதால் அவரது கல்லூரிக் காலக் காதலை சேர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை மீண்டும் பெறுகிறார்.  பின்னர் எதற்காக இத்தனை கதாபாத்திரங்கள் ? யோசிக்கும்போது தோன்றுவது இதுதான்

ஹீரோ கல்லூரியில் ஒரு பெண்ணை விரும்புகிறார். அவர் வேறு மதம் அல்லது சாதியைச் சேர்ந்தவர். ஹீரோ அவ்வாறு காதலிப்பதை இயக்குநர் விரும்ப வில்லை. அது மட்டுமல்லாமல் அவரது வீட்டினரும் விரும்பவில்லை. எனவே அவரது திருமணத்திற்கு ரகசிய வழியில் முட்டுக்கட்டை போடுகிறார்கள். நொந்து போன ஹீரோ மது அடிமையாகி விடுகிறார். வீட்டிலே இருந்து கொண்டு அனைவரையும் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பத்தினரே அவரை கொள்ள முடிவெடுப்பதால் அவரது தாய் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார். அவர் தனது காதலை தேடிப் போய் மகிழ்ச்சியாக வாழ்கிறார். 


மூன்று பெண்கள் இருப்பதன் முழு காரணமும் இயக்குநரே.., ஹீரோ  சாதி மீறி ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்ல அவர் விரும்பவில்லை. இறுதியில் சுபாஷிணியைக் கூட அவர் மணம் செய்து கொள்ளாமல்தான் வாழ்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

#darmaduraipsk

Saturday, September 3, 2016

காதல், களவு தமிழர் பண்பாடே 3.9.16

தனக்கு பிடித்த ஒருவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தன் வாழ்க்கையை தேடிச் செல்வது என்பது பழந்தமிழர் வாழ்க்கையில் இயல்பான ஒன்றே. அதற்கான ஓர் ஆதாரம் இதோ

கழிய காவி குற்றும் கடல
வெண் தலைப் புணரி ஆடியும் நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல் பாழ் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

குறிந்தொகை 116, கோடன் கொற்றனார் எழுதியது

கழிய – ஆறு கடலோடு சேருமிடம், மனைவி கணவனோடு சேருமிடமாகவும் கொள்ளலாம்

காவி –தாம்பூலத்தின் வண்ணம், மலர்கள் ,

குற்றும் – பறித்தும்,அரிசி குத்தும் செயலில் வரும் குத்தும் என்ற பொருளிலும் கொள்ளலாம்

கடல – கடலில் உள்ள,

வெண்டலைப் – வெள்ளைத் தலைகளையுடைய ,

புணரி ஆடியும் – அலைகளில் ஆடியும்,

நன்றே – மிக,

பிரிவு இல் ஆயம் – பிரிவு இல்லாத தோழியருடன்,

உரியது ஒன்று அயர – எல்லோருக்கும் உரிய விளையாட்டையும் புரிய,

இவ்வழிப் படுதலும் ஒல்லாள் – இந்த வழிக்கு ஒத்துக் இருக்காமல், 

அவ்வழி – அந்த வழியில்,

பரல்பாழ் படுப்பச் சென்றனள் – சிலம்பில் உள்ள கற்கள் பாழாக்கும்படி சென்று விட்டாள்.

மாதோ – அசை,

செல்மழை – செல்லும் மழைமேகங்கள்,

தவழும் சென்னி – தவழும் மலை உச்சி, 

விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே   – வானத்து அளவும் உயர்ந்த மலைகள் உள்ள நாட்டிற்கு (சென்று விட்டாள் )
.
இது ஒரு செவிலித் தாய் பாடியதாக உள்ள பாடல்.  இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை படித்து இதில் உள்ள பொருட்களோடு உங்களுக்கு தோன்றும் பொருளையும் சேர்த்து படிக்கும்போது வெளிப்படும் உணர்வுகள் சுவையாக இருக்கும்.
 
இந்தப் பாடல் ஒரு செவிலித்தாயானவள் தனது மகள் காதலனோடு சென்று விட்டதை சொல்லும் வண்ணம் அமைந்த பாடல். இது போன்ற பாடல்களை பள்ளிகளிலேயே சொல்லித் தர ஆரம்பித்தால் காதல் எண்பது மிக இயல்பான ஒன்று என்பதை மிக ஆரம்பத்திலிருந்தே புகட்ட முடியும்.

Friday, September 2, 2016

ஆண்டைகளை அம்பலப் படுத்திய கே.எஸ்.ரவிக்குமார்.

முதலில் இந்தப் படத்தில் ஆண்ட பரம்பரையின் சாதியை சொல்லாமல் விட்டதற்காக கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதனால்தான் அந்த ஆண்ட பரம்பரை பற்றி நம்மால் பேச முடிகிறது.

1.நாட்டாமையில் வரும் ஆண்ட பரம்பரை பாராளும் வம்சம், பச்சை தண்ணியில் விளக்கெரியும் என்ற பில்டப் அல்லது மூட நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்

2.நீதி நேர்மை, நியாயம் காப்பதையே தங்கள் வாழ்க்கையின் உன்னத லட்சியமாக கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வழங்கும் நீதியின் லட்சனத்தை இரண்டு கேஸ்களில் கே.எஸ்.ரவிக்குமார் கிளித்திருப்பார்.

3.எதையும் தீர ஆராயாமல் தனது தம்பி பசுபதிக்கே ஒரு தவறான தீர்ப்பை தந்து விடுவார்.

4.மனோரமாவின் மகன் செய்த தவறுக்கு குடும்பத்துக்கே தண்டனை தருவார்

5.கற்பழித்த பெண்ணை தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை கற்பழித்தவனுக்கே திருமணம் செய்து வைப்பார்கள்.  பின்னரும் அந்த பாவப் பட்ட பெண்ணை ஊரைவிட்டே தள்ளி வைத்து தீர்ப்பு வழங்குவார்கள்.

6.தவிர தவறான தீர்ப்பை தந்து விட்டது தெரிந்ததும் உயிரை விடும்  கவுர தற்கொலை ஆசாமிகள்தான் அந்த நாட்டாமைகள் என்பதை தோலுரித்திருப்பார்.

7.வெளியில் போய் வீடு திரும்பும் கணவனுக்கு பணிவிடை செய்வதே முழுமுதல் கடமையாக வலியுறுத்துவதே நாட்டாமை குடும்பத்தார்க்கு உகந்ததாக காட்டுவார்கள்.

8.சொத்தை பிரிக்கவே பிரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

9சொத்தில்லாத தம்பிகள் என்ன செய்வார்கள் என்பதை செந்தில் ( நாட்டமையின் பங்காளி ) பாத்திரம் மூலமாக அழகாக காட்டி இருப்பார்கள்.

10.நாட்டாமையின் பங்காளியின் நடவடிக்கைகளால் மிச்சர் சாப்பிடும் ஒரு குரூப் உருவானதை அழகாக ஆவணப் படுத்தி இருப்பார்.

11.நாட்டாமை தைரியம் தந்தால் பெண்கள் தங்கள் தந்தையையே தூக்கி எரிவார்கள் என்பதை சங்கவி மூலம் ஆவணப் படுத்தி இருப்பார்.

12.தீர்ப்பு ஊருக்காக இருந்தாலும் நேரிடையாக மீற மாட்டார்கள் என்றாலும் தேவைப்படின் மறைமுகமாக மீற தயங்க மாட்டார்கள் என்பதை மனோரமாவுக்கு தண்ணீர் கொடுக்கும் காட்சியில் ஆவணப் படுத்தி இருப்பார்கள்.

13.ஊர் மக்கள் மட்டுமல்ல சொந்த தம்பிகளே அவருக்கு அடிமைதான் என்ற உணர்வில்தான் அந்த பகுதி மக்கள் அனைவரும் உருவாக்கப் பட்டிந்ததையும் ஆவணப் படுத்தி இருப்பார்.

காதலும் களவும் தமிழர் ஒழுக்கம் 31.8.16

நான் சொல்ல வருவது இந்தப் பாடலில் உள்ள செய்தி அல்ல.., இது போன்ற செய்திகளை பொதுவில் சொல்ல பழந்தமிழ் மகளிருக்கு உரிமை இருந்திருக்கிறது. என்பதே ஆகும். ஆணுக்குக்கு இருக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பது புரிந்தாலே, காதலுக்காக சோகமாக சுற்றுவதும் காதலிக்க மறுத்தவளை கொல்வதும் தவிர்க்கப் பட்டுவிடும்.


யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.



இது கபிலர் எழுதிய பாடல், குறுந்தொகை 25
குறிஞ்சித் திணை அதாவது புணர்தலும் புணர்தல் நிமித்தமுமான பாடல்கள் இந்த குறிஞ்சித் திணையில் வரும்.

//யாரும் இல்லை தானே கள்வன்//
அந்த நிகழ்ச்சி நடக்கும்போது யாரும் இல்லை. தானே கள்வன் என்று சொல்வதால் அவன் திருடிவிட்டான் என்று பொருள் கொள்ளலாம். என்ன திருடிவிட்டான். குறிப்பாக சொல்லாததால் நாயகியின் அகம், அல்லது புறம் என்று நமக்கு வசதியாக பொருள் கொண்டு விடலாம்.


//
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ//
நான் நெனச்சது பொய்யாக போனால் யார் என்ன செய்ய முடியும்?


//தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான்// திணைப் பயிரின் தாள் மாதிரி சின்ன பசுமையான(இளமையான அப்படி எடுத்துக்கலாமா) காலில் ஒழுகும் நீர்... ஆரல் பார்க்கும் குருகும்..,, ஆரல்- ஒரூ வகை மீன் குருகு அப்படின்னா குருத்து..,அதாவது மீனைப் பார்க்கும் குருத்து.



//குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.//
இந்த மேட்டர்ல்லாம் திருமணம் நாளிலிருந்தே


இதையெல்லாம் திரும்ப ஒருமுறை துவக்கத்திலிருந்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்து. உங்களுக்குத் தோன்றும் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
நான் சொல்ல வருவது இந்தப் பாடலில் உள்ள செய்தி அல்ல.., இது போன்ற செய்திகளை பொதுவில் சொல்ல பழந்தமிழ் மகளிருக்கு உரிமை இருந்திருக்கிறது. என்பதே ஆகும். ஆணுக்குக்கு இருக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பது புரிந்தாலே, காதலுக்காக சோகமாக சுற்றுவதும் காதலிக்க மறுத்தவளை கொல்வதும் தவிர்க்கப் பட்டுவிடும்.
#kadhalpsk

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails