Tuesday, May 14, 2019

CSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்


IPL துவங்கும்போது உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்றார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இரு வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றார்கள். தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப ஏலத்தின் அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயித்தார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடி நட்புறவு வளர்க்கவும் , விளையாட்டுத் திறனை வளர்க்கவும் ஒரு களம் என்றார்கள். எல்லாம் அப்படித்தான் துவங்கியது.
தற்போதைய நிலையில் போட்டிகளில் உள்ளூர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியம் என்ற விதி இல்லாமல் போய் விட்டது. தகுதி திறமை என்ற அதே அளவுகோலில் உள்ளூர் ஆட்டக்காரர்கள் ஒதுக்கப் பட ஆரம்பித்தாயிற்று. தற்போதைய CSK அணியையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆர். அஸ்வினை வேண்டாம் என்று சொல்லிவிட்டது. அவரை பஞ்சாப் அணி வாங்கி கேப்டன் ஆக்கியது. ஒரு அணிக்கு கேப்டன் ஆகும் திறமை உள்ளவரையே ஒதுக்கும் காட்சிகள் அரங்கேறிவிட்டது. ஆர்.அஸ்வின் ஏற்கனவே தன்னை நிரூபித்து விட்டதால் அவரை பஞ்சாப் அணி வாங்கியது. இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் டிஎன்பிஎல் போட்டிகளில் பல சாதனைகள் செய்தவர். அவரை பெங்களூரு அணி வாங்கி ஒரு ஓரமாகவே உட்கார வைத்து இருந்தது. தொடர் வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒருவேளை அடுத்த டெண்டுல்கராகவோ, கங்கூலியாகவோ வரக் கூடிய வாய்ப்பு உள்ள வீரர். ஒருவேளை தமிழக கேப்டன் சென்னையில் இருந்திருந்து வாஷிங்டன் சுந்தர் சென்னையில் இருந்திருந்தால் தொடர் வாய்ப்புகள் கிடைத்திருக்கும் (ரெய்னா போல, ராயுடு போல). அப்படித்தான் ஆர். அஸ்வின் தலைமையில் மு.அஸ்வினுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
CSK வில் வாட்ஸனுக்கு பனிரெண்டு ஆட்ட்டம் நன்றாக விளையாட நிலையிலும் தன்னை நிரூபிக்க தொடர்வாய்ப்பு கொடுக்கப் பாட்டது. ஆனால் முரளி விஜய்க்கு வாய்ப்பில்லை. தமிழக வீரர் ஜெகதீசன் CSK வில் தேர்ந்தெடுக்கப்பட்டும் டோனி விளையாடாத போட்டியில் கூட கீப்பர் என்ற முறையிலும் கூட அவருக்கு வாய்ப்பில்லை. இறுதிப் போட்டியில் ஒரு தமிழக வீரரும் சென்னை அணியில் இல்லை.
முன்னர் கூறியது போல சம்பளமும் (ஏலத்தொகை) இவர்களுக்கு முழுமையாக வராது. விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் சதவிகிதக் கணக்கில்தான் வரும்,
தகுதி , திறமை என்ற அடிப்படையில் நீட் மற்றும் இன்னபிற போட்டித் தேர்வுகளிலும் எந்த கட்டுப் பாடும் இன்று வெளி மாநிலத்தவரை அனுமதித்தால் தற்போதைய தமிழக வீரர்களுக்கு CSK வில் நடந்ததைப் போன்ற ஒதுக்கப் படும் நிலைதான் தமிழக மாணவர்களுக்கும் நிகழும்.
ரெய்னாவிற்கும் வாட்ஸனும் நல்ல வாய்ப்புகள் பெறும் சுழலில் முரளி விஜய்யும் ஜெகதீசனும் வாய்ப்புகளை இழப்பார்கள். இந்த கட்டுப்பாடில்லாத வெளி மாநில மாணவர்கள் , பணியாளர்கள் உள் அனுமதியால் நடக்கும்.
வாஷிங்டன் சுந்தர், போன்ற மாணவர்கள் வெளி மாநிலங்களில் சென்று வாய்ப்பே வழங்கப்படாமல் டம்மி பீஸ் என்று பெயர் சூட்டப்பட்டு திருப்பி அனுப்பப் படுவார்கள்.
எங்கோ ஒரு சில மு.அஸ்வின்கள் ஆர். அஸ்வின்கள் போன்ற சீனியர்களால் வாய்ப்பு பெறலாம். ஆனால் அது வெகு அபூர்வமாகவே நிகழும்.
சென்னை என்ற பெயர் இருக்கும் ஒரே காரணத்தால் சென்னைக்கு ஆதரவு அளித்தவர்கள், தகுதி திறமை அடிப்படையில் டோனி, வாட்ஸன் கிடைத்ததை நினைத்து மகிழ்பவர்கள் தலையில் வைத்து கொண்டாடுபவர்கள், தோல்விக்காக அழுது புலம்புவரக்ள். CSK என்ற அணி பல தமிழக வீரர்களை புறகணித்து, வெளி மாநில வெளிநாட்டவர்களை வைத்து உருவாக்கப் பட்ட அணி என்பதை உணர வேண்டும்.
NEET மற்றும் கட்டுபாடில்லா வெளி மாநில பணியாளர்களை உள்ளே அனுமதித்தால் சிஎஸ்கே அணியைப் போல வெற்றி இருக்கும். ஆனால் உள்ளூர் அணி வீரர்கள் இருக்க மாட்டார்கள். வெளிமாநிலக் காரர்கள் உள்ளூர் பணியாளர்களாக இருக்கும் போது, முக்கியமாக தருணத்தில் தேவையற்ற ரன் அவுட், எல்பிடபிள்யூக்கள் நடக்கும். மொத்தத்தில்அணி வென்றாலும் தோற்றாலும் தமிழகத்திற்கு தோல்விதான் மிஞ்சும்.

Sunday, November 26, 2017

சங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்

சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது.

சங்கதாரா என்ற போது  சாரங்கதாரா என்ற படத்தின் பெயர்தான் நினைவுக்கு வரலாம். சிவாஜி நடித்த படம், சிவாஜியின் தந்தையின் மனைவி சிவாஜியை கரெக்ட் செய்ய முயற்சிக்கும் ராஜபுத்ர  கதை. வசந்த முல்லை போல வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே இடம் பெற்ற படம். பொன்னியின் செல்வனில் கூட நந்தினி வீர பாண்டியனின் மனைவியா, மகளா அல்லது இரண்டுமேவா என்ற ஓர் ஏடாகூடா உறவு உண்டு. பெயரிலேயே ஒரு கிளுகிளுப்பு வந்திருக்க கூடும்.

சிறுவயதில் கண்ட கண்ட புத்தகங்களைப் படித்த போது பொன்னியின் செல்வனையும் படித்திருந்தாலும் இரண்டாம் வாசிப்பு பணியில் சேர்ந்த பின் தான். அந்த கதையை படிக்க ஆரம்பித்த போது எந்த சூழலிலும் ஏடு தந்தானடி தில்லையிலே என்று பாடும் எஸ், வரலட்சுமியின் முகம் எனக்குத் தோன்றவே இல்லை. 

நான் பள்ளியில் படிக்குபோது சில நண்பர்கள் உண்டு. அவர்களின் தாயார்கள் அவர்கள் மீது அதீத பாசம் கொண்டவர்கள். எந்த அளவுக்கு என்றால் கிரிக்கெட் பேட் எடுத்துக் கொண்டு விளையாட வருபவனை யாருக்கும் பேட்டை கொடுத்து விடாதே, உடைத்து விடுவார்கள் என்று அட்வைஸ் செய்வார்கள். பள்ளிக்கு தீனி கொடுத்து விடும்போது யாருக்கும் கொடுக்காமல் நீ மட்டும் சாப்பிடு என்று சொல்லி அனுப்புவார்கள். அதுவும் என்னை மாதிரி பசங்களின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காக சொல்லுவது போல சொல்லுவார்கள். 

அது போன்ற பாசமிகு தாயார், தமக்கை பாத்திரமாகவே எனக்கு குந்தவை , பாத்திரம் தோன்றியது. இத்தனைக்கும் பொன்னியின் செல்வனில் குந்தவைதான் பெரிய பாத்திரம், பொன்னியின் செல்வனை விட பெரிய ஹீரோ அவர்தான். எனக்கு படிக்கும் போதே கொஞ்சம் சுய நலம் பிடித்த பிறரை மதிக்காத அரசியல்வாதியாகவே தோன்றினார். கதையின் போக்கு செல்லச் செல்ல பல பிரச்சனைகளையும் வரும்முன் தடுக்காமல் இவரே வளரவிட்டு சரிசெய்து தனது ஹீரோயிசத்தை தக்க வைத்துக் கொள்கிறாரோ என்று தோன்றியது.


நாவல் முடிக்கும்போது ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. முடிந்த பின் கல்கியின் முடிவுரையில் ஒரு கூற்றினைக் கொடுத்திருந்தார். சேந்தன் அமுதனும், மதுராந்தகனும் ஒரே நபராக எழுத ஆரம்பித்ததாகவும் பின்னர் சிலபல விமர்சனங்களைத் தவிர்க்க தனித் தனிப் பாத்திரமாகவும் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அதே போல என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆம் அதே போல நந்தினியும், குந்தவையும் ஒரே பாத்திரமாக இருந்திருந்து கதாசிரியர் வசதிக்காக வேறு வேறு பாத்திரமாக மாற்றி விட்டாரொ என்ற எண்ணம் தோன்றியது போது தான் அந்த விபரீத கற்பனை தோன்றியது.  குந்தவை தான் நந்தினிதான் என்றால் நந்தினிதான் கொலை குற்றவாளி என்றால் .............., உண்மை கொலையாளி யார்?



நான் எழுதினேன். 2010ல் சங்க தாரா வெளியாகியுள்ளது. கண்டிப்பாக சில பல ஆண்டுகள் உழைத்து இருப்பார். நூல் வரும்முன்பே எழுதி விட்டதால் எனது கற்பனை என்றே மனதை தேற்றிக் கொள்ள்லாம் அல்லவா?  

கல்கியின் எழுத்துக்களின் வாயிலாகவே அவர் குந்தவைதான் குற்றவாளி என்பதாக சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று நம்பினேன். பணிச்சூழல் அதற்கான ஆதாரங்கள் தேடும் அளவிற்கு  எனக்கு சுதந்திரம்  தரவில்லை. 

இன்றுதான் சங்க தாரா வைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2010ல் எல்லாம் தினமும் பிளாக்கில் எழுதுவேன் அப்படியும் எனக்கு இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  எனது சந்தேகங்களுக்கு பதில்களை ஆதாரத்துடன் அவித்து வைத்திருக்கிறார். குந்தவைதான் கொலைக்குக் காரணம் என்று நம்பினாலும் யாரை வைத்து கொன்றிருப்பார்? அதற்கான சூழல் எப்படி அமைந்திருக்கும் ? என்பதற்கான விடையாக இந்த நாவல் அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

நந்தினி  வீரபாண்டியனுக்கு மகளாகவும் மனைவியாகவும் இருந்தது போல பொன்னியின் செல்வம் போகும் . அதே நந்தினி ஆதித்ய கரிகாலனுக்கு சகோதரி போலவும் காதலி போலவும் கதையில் தோற்றம் வரும். நான் வேறு குந்தவையும் நந்தினியும் ஒருவரே என்று முழுக்க முழுக்க நம்ப வருகிறேன். கல்கி வேறு நந்தினி ஒரு கற்பனைப் பாத்திரம் என்று சொல்லி விட்டார்.

சங்க தாராவிலும் நந்தினி போன்ற இரண்டு பெண்கள் வருகிறார்கள். குணாதிசிய அடிப்படையில் இரண்டு கதையிலும் குந்தவை ஒருவராகவே வருகிறார். குந்தவை தொடர்புடைய காட்சிகள் சில அப்படியே பொன்னியின் செல்வனிலிருந்து அதே நேரத்தில் மாற்றுக் கோணத்தில் தரப் பட்டுள்ளது.  சில பல இடங்களில் ஆதாரங்கள் தரப் பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் வயது இரண்டு கதைகளிலும் மாறுபாடு நிறைய கொண்டுள்ளது.



சாம்பவி பாத்திரம் சங்கதாராவில் புதியது. ஆனால் இது போன்ற பாத்திரங்கள் சரித்திரக் கதையில் தவிர்க்க முடியாதது. கதையில் வரும் சம்பவங்களை கோர்வைப் படுத்த இத்தகைய பாத்திரம் அவசியம். நாம் சிறுவயதில் தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடர்  பார்த்த போது அதில் காலச் சக்கரமே வந்து அந்த வேளையைச் செய்யும். ஆனால் சாம்பவி பாத்திரத்தின் பின்புலம் சற்றும் எதிர்பாராதது. அதுவும் பொன்னியின் செல்வனின் பாத்திரப் படைப்பில் இருந்தே இதை கொண்டு வருகிறார். சாம்பவியின் ரகசியத்தை கடைசியில் அவிழ்த்தாலும்  கதை படிப்பவர்களுக்கு சாம்பவியின் பின் புலம் எளிதில் புரியும் வண்ணம் ஊரறிந்த ரகசியமாகவே கொண்டு செல்கிறார்.  


செம்பியன் மாதேவிக்கு குழந்தை பிறந்த சில நாட்களில் கண்டாதித்தர் காணாமல் போகும் நிகழ்வே குறிப்பிட்ட ஒரு கேள்வியை வைத்து கதையின் முடிவில் பதிலைத் தருகிறது.

சூரிய மந்திரத்தை உபயோகப் படுத்தும் போதே   கதையின் போக்கு ஒரளவு யூகிக்க முடிகிறது. அதற்கேற்றார்போல் ஓராண்டு சண்டி விரதமும் வருகிறது. கதை முடிந்தபின் மலேசியாவில் உள்ள கல்வெட்டுக்களை ஆதாரமாக காட்டுகிறார் கதாசிரியர்.


ஆதித்ய கரிகாலனின் கோபமும், அவரது சிறந்த பண்பு நலன்களும் இதில் கூறப் பட்டுள்ளது. ஆனால் அவரது நற்பண்புகளுக்கு ஆதாரம்  கதையில் கொடுக்கப் படவில்லை. நாயகனின் நற்பண்புகளுக்கு ஆதாரமும் தேவையில்லையே.  

வந்தியத் தேவனின் பாத்திரம் தியாகம் செய்வதற்கே அவதாரம் எடுத்தது போல கல்கி அமைத்திருந்தாலும் வந்தியத் தேவனின் கத்தியால்தான் ஆதித்ய கரிகாலன் இறந்ததாக கதை அமைத்திருப்பார். அதுவும் கூட நான் குந்தவையை சந்தேகப் பட ஒரு காரணம். சங்கதாராவில்  வந்தியத்தேவனை ஒரு டபுள் ஏஜண்டாகவே காட்டியிருக்கிறார்கள். அவரிடம் இரண்டு சத்தியங்கள் கல்கி காட்டியிருக்கும் பல ஆதாரங்களை மெய்ப்பிக்கின்றன்.

ஆதிச் சோழன் கதையையும் கூட எடுத்தாண்டிருக்கிறார் காலச்சக்கரம் நரசிம்மா

கதாசிரியர் பல இடங்களில் சொந்தக் கவிதைகளைப் போட்டு இடம் நிரப்பியிருக்கிறார்


அந்த இடுகையை எழுதிய போது பின்னூட்டத்தில் ப்ரூனோ கேட்டிருந்தார். குந்தவையை சந்தேகப் படும் நீங்கள் ஏன் அருண்மொழியை சந்தேகப் படவில்லை என்று. நான் உடனடியாக அவர் அக்காபிள்ளை, தனியாக சந்தேகப் பட ஒன்றும் இல்லை என்று. .சங்கதாராவில் இதற்காக ஒரு கல்வெட்டே ஆதாரமாக இருக்கிறது.


கதையில் விரு விருப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது.  காலச் சக்கரம் நரசிம்மாவின் உழைப்பும் கற்பனையும் ஒவ்வொரு பக்கத்திலும் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. இருந்தாலும் கூட ஒவ்வொரு அத்தியாயத்தையும் இன்னும் விலாவாரியாக விளக்கியிருக்கலாம்.  இது போன்ற கதைகளுக்கு பக்கங்கள் ஒரு தடையாக இருக்கக் கூடாது. கதாசிரியர் தான் சொல்ல வருவதை வாசகர்களுக்கு சோர்வு கொடுக்காமல் விளக்க வேண்டும். உடையார் முதல் பாகம் அவ்வாறான ஒரு அயர்ச்சியை கொடுக்கும்.

கிளைமாக்ஸில் குந்தவை பெரிய கோவில் நந்தியின் காதில் சொல்லும் ரகசியம் ஏற்கனவே ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு ஏற்கனவே தெரிந்ததைப் போன்ற கல்வெட்டுகள் காட்டப் படுகின்றன்.



கதையில் நெகடிவ் என்று பார்த்தால்

1.இந்த கதையின் தலைப்பு பொன்னியின் செல்வனை கொஞ்சம் கூட உறவு கொண்டாடவில்லை. சங்கதாரா சோழ மன்னர்கள் முடி சூட பயன்படுத்தும் பொருட்கள். அதை விளக்கியிருந்தாலும் கூட ஏதோ ராஜ புத்திர கதையை மொழிபெயர்த்தது போன்று தலைப்பு அமைந்துள்ளது.

2.குமுதம், ஆனந்த விகடன் போன்ற ஏதாவது ஒரு புத்தகத்தில் தொடராக வந்திருந்தால் நிறையப் பேரை சேர்ந்திருக்கும், கதையை இன்னும் நீளமாக இழுத்திருக்கலாம்.

3, கதை முடியும்போது சாம்பவி சொல்லும் விஷயங்கள், தோழிப் பெண் சொல்லும் விஷயங்கள்  ஏதாவது ஒரு இடத்தில் சஸ்பெண்ஸ் வைத்து உடைத்திருக்கலாம்.

4,பல இடங்களில் வரும் சொந்தக் கவிதைகள்

Saturday, February 4, 2017

CBSE என்ற போர்வையில் வரும் ஏமாற்று வேலை.

நீட் தேர்வு எதிர்ப்புக்கு நான் சொல்லும் முக்கிய காரணம் ஸ்டேட் போர்டு மாணவர்களை CBSE பாடத்திட்டத்தில் தேர்வெழுதச் சொல்லுவதே, நம் மக்களின் உடனடி எதிர்வினை எப்படியென்றால் எல்லோரையும் CBSE பாடத்திட்டத்திலேயே படிக்க வைக்கச் சொல்லலாமே என்கிறார்கள்.

பிதாகரசு தேற்றமோ, sin, cos, tan வகையறாக்களோ, ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், அனுக்கள், பிளவுகள், போன்றவை எல்லா பாடத்திட்டத்திலும் ஒன்றுதான். வித்தியாசப் படுவது நமது மொழி, வரலாறு போன்றவைகளை படிக்கும் போதுதான் . இந்தியா போன்றதொரு மிகப் பெரிய நாட்டின் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமும் அடையாளங்களும் உண்டு. அவைகளை அடுத்தவர் பார்க்கும் பார்வை படு கேவலமாக இருக்கும். வடக்கிலும் தெற்கிலும் விதவை மறுமணம் ஒவ்வொரு சமூகத்திலும் எந்தப் பார்வையில் இருந்தது என்று ஒவ்வொரு 20 ஆண்டுகள் பின்னோக்கி போனாலே ஓரளவு புரியும்.

இதற்கு உதாரணமாக ஒரு முகநூல் குழுவில் நிகழ்ந்த உடையாடலைச் சொல்ல முடியும். அந்த குழுவில் நண்பர் ஒருவர் வீட்டில் வைக்கக் கூடாத கடவுள்கள் படங்கள் என்ற தலைப்பில் பழனி முருகன் மூல்வர் படத்தையும் போட்டிருந்தார்.

நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

சாஸ்திரப் படி என்றுவேறு போட்டிருந்தார். சாஸ்திரம் என்றால் எந்த சாஸ்திரம் என்று கேட்டிருந்தேன். அவரிடமிருந்தும் அந்த போஸ்ட்டை ஆஹா ஓஹோ என்று சிலாகித்து எழுதியிருந்தவர்களிருந்தும் பதில் இல்லை. அதற்கு பதிலாக என்னிடம் ஏன் விதண்டாவாதம் புரிகிறீர்கள் என்ற கேள்வியும் உலகில் பழனி முருகன் மட்டும்தான் முருகனா? வேறு முருகன் படம் வைத்து கும்பிட வேண்டியதுதானே என்று பதில் கேள்வி.

நான் எந்த கடவுளையும் இந்த போஸ்ட் மூலம் கேள்வி எழுப்பவில்லை. எனது ஊர் பழநி. பழநி முருகன் மூலவர் சிலையின் படத்தை வைக்கக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள் காரணம் கேட்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. பதில் சொல்ல வேண்டிய கடமை போஸ்ட் போட்டவருக்கும் ஆதரித்து குரல் எழுப்புவர்களுக்கும் இருக்கிறது. பதிலைச் சொல்லுங்கள் என்று உறுதியாக  நின்றேன்.

இப்போது வேறு மாதிரியான பதில் வருகிறது. துறவிக் கோலத்தில் நிற்கும் முருகனைப் பார்த்தால் நெகடிவ் இம்பாக்ட் வரும். உங்களுக்கு விருப்பம் என்றால் வைத்துக் கொண்டு கஷ்டப் படுங்கள் என்ற மிரட்டலான பதில். பல மடாதிபதிகளும் துறவிக் கோலத்தில்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் படங்களுக்கு இல்லாத ஒரு பயமுறுத்தல் தத்துவம் பழநி முருகன் மூலவர் படத்திற்கும், இன்ன பிற  சக்தி வடிவங்களுக்கும் தருகிறார்கள். அந்த  செய்தி படிக்கும் பலருக்கும் வாட்ஸ் அப் மூலம் கிடைத்திருக்கும். இது ஒரு வகையான மென்மையான மூளைச் சலவை.

இன்று படத்தை வைக்கக் கூடாது என்பார்கள். அடுத்து நல்ல காரியங்களுக்கு வைக்கக் கூடாது என்பார்கள். பின்னர் நல்ல காரியம் முடிந்த பின் போகக் கூடாது என்பார்கள். படிப் படியாக அவர்கள் தெய்வத்தை திணிப்பார்கள்.

பழநியிலேயே பழநியாண்டியை தரிசிக்க அந்த அலங்கார நேரத்திற்கு செல்லும் நபர்கள் நிறைய உண்டு. திருமணம் முடிந்த கையோடு வனதுர்க்கை கோயிலுக்கும் பத்ரகாளியம்மன் கோவிலுக்கும் செல்பவர்கள் பல குடும்பங்களை நான் அறிவேன். அந்தக் குடும்பங்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

இதெல்லாம் அவர்கள் புரியாதது போலவே தமிழ் கடவுள்களை மட்டம் தட்டுவார்கள்.

இதுதான் CBSE க்கும் ஸ்டேட் போர்டுக்கும் உள்ள வித்தியாசம். தமிழ்நாட்டு பாடத்திட்டம் சரியில்லை என்றால் அந்த பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். கணிதம், அறிவியில் ,  புவியியல், உலக வரலாறு ஆகிய பாடங்களை பொதுமைப் படுத்தலாம். மொழி, பிராந்திய வரலாறு போன்றவைகளை அந்த் அந்த மாநிலங்களிடம் விட்டுவிடலாம். மருத்துவக் கல்லூரி தரம் போதாது என்றால் மருத்துவக் கவுன்சில் மூலமாக தரமுயர்த்தலாம்.

அதை விடுத்து விட்டு ஸ்டேட் போட்டு மாணவனை CBSEல் தேர்வு எழுதச் சொல்லுவதுதான் தரத்தை உயர்த்தும், ஊழலை தவிர்க்கும் என்பது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை. இதில் நீட்டை தவிர்த்தால் மாணவர்கள் பல தேசிய அளவிலான வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்ற மிரட்டல் வேறு. நீட்  என்ன மாதிரியான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, நீட்டைத் தவிர்த்தால் இழக்க என்ற கேள்விக்கு பதில் இல்லை.

தமிழக அரசு காசு போட்டி கட்டி நடத்தும் மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சேர CBSE தேர்வினை எழுத வேண்டும் என்ற ஏமாற்றுத்திட்டமான நீட்டை நாமெல்லாம் எதிர்த்தே ஆக வேண்டும்.

Friday, January 27, 2017

நாட்டு மாட்டினங்கள் வளர என்ன செய்ய வேண்டும்?

நாட்டு மாட்டினங்கள் வளர என்ன செய்ய வேண்டும்?
நாட்டு மாட்டினங்கள் வளர்ப்போரின் வருமானம் பெருக வேண்டும்.
பால் உற்பத்தியை பெருக்கினால் மாடு வளர்ப்போரின் வருமானம் பெருகுமா?
பெருகும். ஆனால் நாட்டு பசுக்கள் கொடுக்கும் பால் நம் தேவையை விட மிகக் குறைவு. கலப்பினங்களும் இறக்குமதி இனங்களுமே பால் தேவையை சமாளிக்க முடியும்.
விவசாய வேலைக்கு மாடுகளை உபயோகப் படுத்துவதன் மூலம் காப்பாற்ற முடியுமா?
நவீன கருவிகள் வந்துவிட்ட நிலையில் மீண்டும் நாட்டு மாடுகள் உபயோகம் என்பது வேலை மிக மெதுவாக நடைபெறச் செய்து செலவை அதிகரிக்க வைத்து விடும்.
சல்லிக் கட்டுகள் மூலம்?
சில வகை மாடுகள் மட்டுமே சல்லிக் கட்டுக்கு பயன்படுத்த முடியும்.தவிர சல்லிக் கட்டு மாடுகள் மூலம் வரும் வருமானத்தை விட பல மடங்கு செல்வழித்தால் மட்டுமே களத்தில் மாடுகள் மானம் காக்கும்.
அடிமாட்டுக்கு போகும் மாட்டை தடுப்பதன் மூலம்...,
அதனால் வயோதிக மாட்டுக்கான பராமரிப்பு செலவு அதிகரிக்கும், அவ்வளவுதான், நீண்டகால அளவில் பெரிய மாற்றம் ஒன்றும் வந்து விடாது.
பின்னர் என்னதான் வழி?
பிராய்லர் கோழி வளர்ர்பு போல நாட்டு மாடுகளை வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோழிகளை சாப்பிடுவார்கள். எனவே நல்ல விற்பனை ஆகும் வருமானமும் கூடும்.
நாட்டுமாடுகளை..,
நாட்டு மாட்டுக் கறிகளை வெளிநாட்டில் உண்பார்கள். எனவே சரமாறியாக ஏற்றுமதி செய்யலாம்.
இந்தியாவிலேயே 125கோடி மக்கள் இருக்கிறார்களே..,
அவர்கள் மாட்டை சாபிட்டாலோ உயர் ரக மனிதர்களால் கொடுரமாக தாக்கப் படும் வாய்ப்பு இருப்பதால் அதை மட்டும் செய்யக் கூடாது,

Thursday, December 8, 2016

சோ வுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும் திமுக

1996
அதிமுக மீதும் அதன் தலைமை மீதும் சண்டிவி , வருமான வரி துறை ஆகியவை மிகப் பெரிய வெறுப்பை விதைத்து வைத்திருந்தன.


வைகோவால் திமுக ஒரு பிளவை சந்திருந்தது. 18 மாவட்ட செயலாளர்கள் வைகோ பக்கம். பேச்சாளர்கள், சொந்த செல்வாக்கு உடையவர்கள். மிகப் பெரிய பிளவாகவே அரசியல் பிரமுகர்கள் கருதினார்கள்.


பாஷா பட விழாவில் ரஜினி பேசியதற்காக பாஷா படத் தயாரிப்பாளரும் சத்யா (எம்ஜிஆரின் அம்மா பெயர், எம்ஜிஆர் நடித்த காலத்தில் எம்ஜிஆரை வைத்து மட்டுமே படம் எடுத்த கம்பெணி அது. பினாமியா என்றெல்லாம் எனக்குத் தெரியாது) மூவீஸின் உரிமையாளர் ஆர் எம் வீர்ப்பன் கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தார். ரஜினிகாந்த், தளபதி ,மன்னன், அண்ணாமலை, பாஷா என்று புகழில் உச்சத்தில் இருந்தார். சில்வண்டுகள் முதல் 50 வயது வரையிலான ரசிகர்கள் அவர் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருந்தார்கள்.ரஜினியும் சிலபல காரணங்களுக்கா அப்போதைய ஆட்சியாளர்களை எதிர்த்து வந்திருந்தார்.


 கட்சித் தலைவராக ஆர்.எம்.வீ யும் முதல்வர் வேட்பாளராக ரசினியும் வைத்து ஒரு கட்சி உருவாகியிருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருந்த சூழல்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் தமாகவை உருவாக்கி திமுக தமாகவை உருவாக்கி அதற்கு ரஜினியின் வாய்மொழி ஆதரவையும் அண்ணாமலையிலிருந்து உபயோகப் படுத்தப் படாத ஒரு புகைப் படத்தையும் வாங்கிக் கொடுத்து திமுக வை ஆட்சியில் அமர்த்தினார். அந்தப் பத்திரிக்கையாளர் சோ அவர்கள். அந்த வகையில் சோவுக்கு திமுக மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

Tuesday, October 18, 2016

பாகிஸ்தானிலிருந்து பிரம்மபுத்ரா வழியாக

பிரம்மபுத்திரா ஆறு திபெத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி, சீனாவிற்குள் நுழைந்து இமயமலையின் ஓரமாகவே பயணம் செய்து அருணாச்சல் பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம் பூடான் வழியாக வங்கதேசம் அடைந்து கங்கையுடன் கலந்து வங்கக் கடலை அடைகிறது.

வற்றாத ஜீவ நதிகளில் இதும் ஒன்று. இந்த ஆறு 3848 கி.மீ நீளமானது.கடும் மழை பொழிவினாலும், வெப்ப காலங்களில் இமயமலையில் உள்ள பனி உருகுவதாலும் எப்போதுமே வெள்ளப் பெருக்கில் இருக்கும் ஆறு இது.  துணை ஆறுகள் தவிர்த்து பிரம்மபுத்ரா மட்டுமே விநாடிக்கு 700,000 கன அடி நீரைத் தருகிறது.

பிரம்ம புத்திரா இந்தியாவில் பாயும் பகுதியானது land of seven sisters என்று அழைக்கப்படக் கூடிய வட கிழக்குப் பகுதி. அங்கே பெய்யும் மழையிலேயே பிரம்மபுத்ரா ஓடிக்கொண்டேதான் இருக்கும்.  பிரம்மபுத்ரா ஆறினை முழுவதுமான அணைக்கட்டித் தடுக்கவே முடியாது. அவ்வளவு நீர் இருக்கும் ஆறு அது.  காவேரி அணைகளிலேயே மழைக் காலங்களில் திறந்து விட்டு விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பிரம்மபுத்ராவில் அணை கட்டினாலும்கூட அது இந்தியாவுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. அதை அவர்கள் சொல்லவும் போவதில்லை. 1990களிலேயே இவ்வாறு ஒரு வதந்தி கிளம்பி அதை அவர்கள் மறுத்து இருக்கிறார்கள். 

2011ல் மஞ்சள் ஆறு (பிரம்மபுத்ராவை விட பெரிய ஆறு) அணை கட்டப் பட்டதால் புவியியல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்பட்டு அதை சரி செய்ய சீன அரசு போராடி வருகிறது.

இந்த மாதிரி ஒரு சூழலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து சீனா பிரம்மபுத்ரா ஆறை தடுத்து நிறுத்தி இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேளை பிடித்து வைத்திருந்தால் இந்திய அரசு சீனப் பொருள்களின் மீது தடை விதித்து இருக்கும் ஆனால் அப்படி இந்திய அரசு செய்ய வில்லை. 
தவிரவும் சீனாப் பொருட்களுக்கு இந்தியாதான் பெரிய மார்க்கெட் என்னும்போது  அவர்கள் இந்தியாவை பகைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு லாபம் எங்கோ அந்தப் பக்கம்தான் சேர்வார்கள்

அப்புறம் எப்படி சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வாட்ஸ் அப் செய்திகள் பரவுகின்றன? பதில் மிக சுலபமானது. சீன மொபைல்கள் இந்தியாவுக்கு மார்க்கெட் வந்தபின் மைக்ரோமாக்ஸ், லாவா போன்ற இந்திய கம்பெனிகள் அதை அப்படியே வாங்கி இந்த்யாவில் விற்பனை செய்வது போன்றே.

மலிவு விலை சீனப் பொருட்களை இங்கிருக்கும் முதலாளிகள் வாங்கி இந்தியப் பெயரில் விற்கப் போகிறார்கள். அதற்கான முதல்படியாகவே தோன்றுகிறது. அதாவது சில்லறை வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் முதலாளிகளுக்கு போகப் போகிறது.

முடிந்தவரை இந்தியத் தயாரிப்பில் உருவான பொருட்களையே வாங்குங்கள். சீனப் பொருட்கள் விஷயத்தில் இந்திய அரசு எதுவும் சொல்லும்முன் எந்த பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம்.

Sunday, October 9, 2016

சில்லறை வியாபாரிகளை வாழ வைக்கும் சீனப் பொருட்கள்.

பாகிஸ்தானுக்கு சீனா தான் ஸ்பான்சர் செய்வதாகக் கூறி சீனப் பொருட்களை புறக்கணிக்கக் கோரி ஆங்காங்கே குரல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நாம் அனைவருக்குமே பல ஆண்டுகளாக தெரிந்த ஒரு விஷயம். பாகிஸ்தானுக்கு பெரிய ஸ்பான்சர் அமெரிக்கா என்பது. திடீரென ஏன் சீனா மேல் மட்டும் இப்படி ஒரு எதிர்ப்பு?

சீனா இந்தியாவில் கொட்டி இருக்கும் பொருட்கள் பெரும்பாலும் மலிவு விலை வீட்டு உபயோகப் பொருட்கள். இந்த விலையில் இந்திய தயாரிப்புகள் கிடைக்க இப்போது வழியே இல்லை. 100 ரூபாய் கொசு பேட் இந்தியா தயாரிப்பு என்றால் குறைந்தது. 500ஆவது ஆகும்.

இந்திய மார்க்கெட் வளர வேண்டும் என்று நினைத்தால் அன்னிய பொருட்களையே எதிர்க்கலாமே..,

பாகிஸ்தான் ஸ்பான்சர் என்றால் அமெரிக்க சீனப் பொருட்களைப் புறக்கணிக்கலாமே

பெப்சி, கோக்கை விடவா சீனப் பொருட்கள் இந்தியப் பொருளாதாரத்தை சுரண்டி விடுகின்றன்?

அப்புறம் ஏன் சீனப் பொருட்கள் மட்டும் புறக்கணித்தல்?

சீனப் பொருட்களைப் புறக்கணித்தால் அடுத்த நிலையில் உள்ள பிற பன்னாட்டு கம்பெனிகளுக்கு லாபம் கிடைக்கும். அவர்கள் கொள்ளை அடிப்பது சீனாவால் தடுக்கப் பட்டு வருகிறது. ஏன் என்றால் சீனப் பொருட்கள் விலை மிகக் குறைவு.

அடுத்ததாக சீனப் பொருட்கள் இந்தியாவில் பெருமளவில் சில்லறை விற்பனையில் கிடைக்கிறது. ஓரளவு சில்லறை வியாபாரிகளுக்கும் லாபம். மக்களுக்கும் மலிவு விலையில் கிடைக்கிறது.

இதே பன்னாட்டு கம்பெனிகள் என்றால் அவர்கள் வைத்த விலை. பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கும்.

எனவே நமது முதல் தேர்வு - இந்தியப் பொருட்கள்

இரண்டாவது தேர்வு: சீன தயாரிப்புகள்( இந்தியப் பொருட்கள் இல்லா நிலையில்)

நாம் ஒதுக்க வேண்டிய பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளே..,

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails