Monday, May 31, 2010

இலக்கியத்தில் கெட்ட வார்த்தை

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய இலக்கியங்கள் எவ்வளவோ வந்து இருக்கின்றன. அதிலும் பல இலக்கியவாதிகள் சிலபல நாட்கள் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுத அவர்கள் தங்கியிருக்கும் ஊருக்கே வந்து அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து எழுதுவார்களாம்.  அவர்களோடு வாழ்ந்து எழுதிருப்பார்களா என்பது அவர்களைக் கேட்டால்தான் தெரியும்,. 

நான் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் விளிம்பு நிலை மனிதர்களின் கதைகளை ப் படிக்கும்போது கெட்ட வார்த்தைகள் குபீர் குபீரென விழும்.   பெண்கள் மிக சாதாரணமாக கெட்ட வார்த்தைகள் உபயோகப் படுத்துவார்கள்.  பதின்மத்தின் துவக்கத்தில் இருந்த நண்பர்கள் அந்த வார்த்தைகளின் உள்ளர்த்தங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.


பின்னர்தான் தெரிந்தது இது போன்ற கெட்ட வார்த்தைகளை சேர்த்தால்தான் விளிம்புநிலை மனிதர்களின் கதை, கதை களத்தோடு ஒன்றிப் போகுமாம்.  இல்லையென்றால் அந்தக் கதைக்கும்  சராசரி மனிதர்களின் பிரச்சனைக்கும் வித்தியாசம் தெரியாதாம்.  அதற்காகவே இந்த கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தே தீரவேண்டுமாம். 

பாகவதர் காலத் திரைப்படங்களில் பேசப்பட்ட மொழியாகட்டும், அதற்கடுத்த மனோகரா கால மொழியாகட்டும், தங்கப் பதக்கம் சிவாஜிகால மொழியாகட்டும், திரைப் படங்களின் தாக்கம் மக்களின் பேச்சுக்களில்  அதிகம் இடம் பிடித்திருக்கிறது. என் எஸ் கே பாணியைவிட நாயக்ர்களின் பாணி பேச்சு வழக்கு இடம்பிடித்து இருக்கிறது.  சிலருக்கு கவுண்டமணி பாணி பேச்சுக்களும் இடம் பிடித்திருக்கிறது.

என் நண்பன் ஒருவன் சின்ன வயதில் மாவீரன் படத்தில் ரஜினி உபயோகிக்கும் ஸ்டைலிஷ் வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்துவான்.  அதற்காக வீட்டில் நிறைய அடிவாங்கினாலும் அவன் அதை மாற்றவே இல்லை, மிக நெடுங்காலம் ஆகியும்கூட அந்த வார்த்தையை மிகக் குறைந்த அளவிலாவது உபயோகப் படுத்தியே தீருகிறான். ஆனால் விளிம்பு நிலை மனிதர்கள் இப்போதெல்லாம் மிகச் சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்துவதில்லை.  புதிய தலைமுறை மாணவர்களிடம் இந்த எச்சரிக்கை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கிறது,.  கிராம மாணவர்களிடம் மிக அதிகமாகவே இருக்கிறது.  ஆனால் நகரத்தில் இது போன்ற கெட்ட வார்த்தைகளை நண்பர்கள் மத்தியில் சரளமாகவே உபயோகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


பல கதைகளில்  இந்த கெட்ட வார்த்தைகளை தவிர்த்தால் கூட கதையின் சாராம்சம் குறையாமலேயே பார்த்துக் கொள்ள முடியும். இன்று அவர்களின் வாழ்க்கை மாறிக்கொண்டுதான் இருக்கிறது.  மாற முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் மிகத் தவிர்க்க       இயலாத சூழலில் தங்கள்மேல் விழும் உடல் ரீதியான மனரீதியான  வ்ன்முறையை எதிர்க்க மட்டுமே இந்த வார்த்தைகளை உபயோக்ப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

தயவு செய்து விளிம்புநிலை மனிதர்களை பற்றி கதை எழுதினால் அதில் கெட்ட வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள். இதுபோன்று தவிர்ப்பதால் கதை இயல்பாக இல்லாமல் போகலாம். யார் அறிவார்கள்? ஒருவேளை நீங்கள் இயல்பு மாறி எழுதுவதால் கூட அவர்களின் அந்த இயல்பே மாறிப் போகக்கூட நேரிடலாம்.

டிஸ்கி 1:

இது எதிர்வினை அல்ல

டிஸ்கி 2

எதிர்வினை அல்ல என்பதால் எந்தப் பதிவிற்கான எதிர்வினை என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யக் கூடாது

டிஸ்கி 3

இந்தக் கெட்ட வார்த்தைகளை கதையில் புகுத்துவதால் கெட்டவார்த்தைப் போட்டு கூகிள் ஆண்டவரின் தேடும்போது உங்கள் தளம் முண்ணிலையில் வந்து ஹிட்ஸ்களைக் குவிக்கக் கூடும்

Monday, May 17, 2010

முரட்டு சிங்கம் - ஒரு கண்ணீர் காவியம் (இரும்புக் கோட்டை தெரிந்தவர்களுக்கு)

எருமைக்கு நோவுன்னா காக்கைக்கு கொண்டாட்டம் -  என்.எஸ்.கிருஷ்ணன் மதுரை வீரனில்

அக்காமாலாவையும், கப்ஸியையும் கவிழ்த்து, அந்த குளிர்பானங்களுக்கு விளம்பரம் கொடுத்தவர்களை ஓங்கி அறைந்து, நாடக் நடிகை செல்லம்மாவை பெண் என்பதால் விடுகிறேன் என்று சொன்ன சிம்புதேவனின் படத்தை ஆராயாமல் , அனுபவித்து சிரியுங்கள் என்று சொன்னால் எப்படி? அதனால் நாம் நம் பாணியில் ஆராய உட்கார்ந்தோம். வாழ்க ஞாயிற்றுக் கிழமை. 

=========================================================

சில உண்மைக் கதைகளை எடுத்துவிட்டு அதைக் கற்பனை என்று டிஸ்கிபோடுவார்கள் . இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். ஆனால் அதை வேறு களத்தில் எடுத்து இருக்கிறார்கள் அவ்வளவுதான்.  சிங்கத்தின் பெயரைக் கேட்டாலே அது புரிய வேண்டும்.கௌபாய் பிண்ணனி இல்லாமல் வேறு எந்தக் கட்டத்தில் எடுத்திருந்தாலும் உண்மைக்கதை உடனடியாகப் புரிந்திருக்கும். இப்போது கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கவேண்டும்

http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/IKMS.jpg

=============================================================

வலைப்பூ எழுதும் பலரும் காமிக்ஸ் ரசிகர்களாக, வெறியர்களாக இருப்பதால் அவர்கள் பலருக்கும்  இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்  முழு திருப்தியளிக்கவில்லை என்றும் ஆனாலும் படத்தைப் பார்த்து மகிழ்ச்சியோடு கூடிய திருப்தி அடைவதாகவும் எழுதியிருந்தார்கள்.  அவர்கள் ஏன் மகிழ்ச்சி அடையவில்லை என்பதைஆராய்வதே நமது முதல் கட்ட லட்சியமாக இருந்தது.  


பொதுவாக டெக்ஸ்வில்லரைப் பார்த்தால் எனக்கு எப்போதுமே எம்ஜியார் நினைவுதான் வரும். லக்கிலுக்கைப் படிக்கும்போது நாகேஷ் நினவு வரும். 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzLPfi-0EtnlMwv18Kp8M5-azDaEWjhhvRoC2nb_mJ9WjZiLEPe8cr9gsBMYO0YEJKehTwcghYMZl51mBJV6U_AEkii2Z3lMy-uWHJHesEYx-h4gundrYGFAya8HyN2k41_zteCzCAsMo/s400/Original+still+for+the+Ad+poster.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiUo7IZlyRt9iOa6MNQKwcqCQxJl6iO5dAojJ0v4jrpR3WTSR6mpEHuUBVXA4MUM5kb50bb6o7M0_-O4xXIFtkL-0n3QM4NRh4tM69-oQK9H_Xe44_Cjs1KJE3hYawzzS9vvKjjOLUgU9z/s400/vijay-vettaikaran-still.jpg
அதுவும் டெக்ஸ்வில்லரின் பாத்திரப் படைப்பு எம்ஜியார் படங்களின் பாத்திரப் படைப்புக்கு ஈடாகவே எனக்குத் தோன்றியது. எம்ஜியார் தாழ்த்தப் பட்ட மக்களுக்காக போராடுபவராக வருவார். ஆனால் அவர் உயர்ந்த குடியில் பிறந்தவராகவே வருவார். மதுரைவீரன் திரைப்படத்தில் கூட  மதுரைவீரன் ஒரு ராஜகுமாரன் என்றும் அந்தக் குழந்தையை தூக்கி காட்டில் வீச அதை எடுத்து செருப்புத் தைப்பவர் வளர்த்ததாகக் கதை சொல்லுவார்கள். நானும் அதற்கான ஆதாரத்தை தேடிக் கொண்டே இருக்கிறேன். எந்த எழுத்துவடிவங்களிலும் அப்படி இருப்பதாக யாரும் சொன்னதில்லை.கர்ணபரம்பரைக் கதைகள் கூட மதுரைவீரன் பூர்வகுடியாகவே சொல்லுகின்றன. ராஜகுமாரனாகக் காட்டவில்லை. ஆனால்  அப்படி ஒரு பிம்பத்தை தொடர்ந்திருப்பார்,அப்படி எடுத்தால்தான் பெருவாரியான மக்கள் பார்ப்பார்களோ என்னவோ!


டெக்ஸ் வில்லரும் அப்படித்தான். பல கதைகளில் நவஜோக்களுக்கு, செவ்விந்தியர்களின் பங்காளராக வந்தாலும் அவர் ஒரு வெள்ளையர். ஒரு வெள்ளயரை முன்னிலைப் படுத்தியே கதை நகரும்.   


ஆனால் லாரன்ஸின் தோற்றம்,  டெக்ஸ்வில்லரின் பழிவாங்கும் பாவையில் வரும் வில்லனைப் போல அதாவது வெள்ளையரின் நடை உடையில் வலம் வரும் செவ்விந்தியரைப் போல அல்லவா தெரிகிறது. டெக்ஸை எதிர்பார்த்து வருவோருக்கு டெக்ஸின் வில்லனை ஹீராவாக ஏற்கும் மனம் வருமா? தவிரவும் தொடக்க காட்சிகளில் ரஜினையை வேறு கிண்டல் செய்கிறார்.   கருப்பராக தோற்றமளிக்கும் லாரண்ஸ் மக்களின் மனதில் இடம் பிடிக்க சிரமப் படுகிறாரோ என்னமோ!

http://www.writermugil.com/wp-content/uploads/2009/12/mgr-vettai.jpg




ஆனால் கதைப் படி  கதாநாயகனின் கூட்டம் பூர்வ குடிகள் அல்ல, அதற்கு மனோரமாவின் உடைகளே சாட்சி



=======================================================


அடுத்ததாக நாயகிகள். என்னத்த சொல்ல, ஒவ்வொரு பாடலின்போதும்  அலைப்பேசியில் பேசி பாடலைக் கவனிக்கத் தவறிவிட்டேன். இருந்தாலும் சந்தியாவின் கண்கள்.  அத்தோடு  மண்டையோடு சேர்த்து, ......... ண்டையும் உடைத்துக் கொண்ட நாயகியின் தலை முடி, லட்சுமிராயின் எஸ்பாஸ் இவ்வள்வுதான் எனக்குத் தெரிந்தவை.


==============================================================


U S A  கோட்டையினருடன் செய்யும், அணு ஆயுத ஒப்பந்தம் ,அணு ஆயுத ஒப்பந்தமாக உங்களுக்கு தோன்றுகிறதா? அதிகாரப் பகிர்வு என்று சொல்லிக் கொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையும் கேலி செய்வதாகவே தோன்றுகிறது.  


=================================================================


தலைவன் இறந்ததை மறைத்துவிடவேண்டும்,. அப்போதுதான் தொடர்ச்சியாக் போரிட முடியும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்கள். முகலாய சரித்திரத்தில் இதைக் காணமுடியும்.  ஹேமு ஏறக்குறைய போரில் வெற்றி பெற்ற நிலையில் குத்துப் பட்டு இறக்க  அவரது படைகள் முகலாயப் படைகளால் சின்னாபின்னப் படுத்தப் பட்டு முகலாய சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழக்கால் ஊன்றுகிறது.


1. சிங்கத்தின் கதை


2. சிங்காரத்தின் கதை


ஒருவேளை சிங்காரம் இறந்திருந்தால் அது ஊடகங்களின் பார்வைக்கு வந்திருந்தால் சிங்காரத்தின் இறந்த புகைப்படம் சிங்கத்தின் பழைய புகைப்படத்துடன்  ஒப்பிடப் பட்டு சிங்கம் இறக்கவில்லை என்று மீண்டும் நிறுவப் பார்த்திருப்பார்களா?  அப்போதும்  ஜெய்சங்கர் புர மக்களின் நம்பிக்கையான சிங்கம் வருவார் என்பது தொடர்ந்திருக்குமோ?

===================================================

ஜெய்சங்கர்புரம், ஷோலேபுரம் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்களே? அனுராதா புரம் என்று அந்தக்காலத்திலேயே தமிழன் ஒரு நடிகையின் பெயரை வைத்திருக்கிறானே அதையெல்லாம் தொடர்படுத்திக் கொள்ளலாமா?

===============================================================

அப்படி என்றால் சிங்கத்திற்கும் சிங்காரத்திற்கும் உள்ள இடைவெளி. அந்த கட்சி மாறும் கோடரிக்காம்புக்கு தெரிந்திருக்குமே?  அப்போது அந்தக் கதாபாத்திரம் என்ன செய்திருக்கும்?

==========================================================
நாசரின் ஒரு கண் சொல்லும் கதைகள் என்ன என்ன? கடைசியில் அந்தக் கண்ணைக் கீழே போட்டு கசக்க வைக்கும் சிம்பு தேவன் சொல்லுவது தான் என்ன? சிலருக்குப் புரியும்.

====================================================


தமிழ் எழுத்துக்கள் எத்தனை ? பொங்குதமிழனுக்கு கஷ்டம் ஏற்படும்போது என்ன செய்வான் போன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் சிம்பு தேவன் செய்துள்ளார். வாழ்க சிம்பு தேவன்.  நாம் தேடியலையும் பல விஷயங்கள் நம் கண் எதிரிலெயே உள்ளன. அதைவிடுத்து நாம் பல ஆபத்துக்களை தாண்டித் தாண்டி தேடிக்கொண்டே இருக்கிறோம் என்ற ஆன்மீகக் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார் சிம்புதேவன்.

மீண்டும் மீண்டும் பார்க்க பல கோணங்களில் படத்தை ரசிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.
=========================================
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே

-ஆயிரத்தில் ஒருவன்

Monday, May 10, 2010

எட்டாம் வகுப்பு படித்து விட்டு நேரடியாக ஐ.ஏ.எஸ் படிக்க என்ன வழி?

சமச்சீர் கல்வி பற்றியும் கூட நாம் எழுத வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டோம். சில தளங்களில் கொடுக்கப் ப்ட்டிருந்த தகவல்கள் பற்றிப் பார்த்தால் சி.பி.எஸ்.சியில் 7ம் வகுப்பில் படிப்பதைத்தான் ஸ்டேட் போர்டு மாணவன் 12ம் வகுப்பில் படிக்கிறானாம். எனவே சமச்சீர் கல்வி முறையால் மாணவர்களின் தரம்  குறைந்து விடுமாம். எனவே இது போன்ற தரம் குறையாமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். தளங்களில் மட்டுமல்லாமல் சில கல்வியாளர்கள் கூட அவ்வாறு சொல்லிக் கொண்டு சுற்றுகிறார்கள் . எனக்கு வெகு காலத்திற்கு முன்பே இது பற்றியெல்லாம் சில சந்தேகங்கள் இருந்தன.

அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டம் தரம் குறைந்ததாகவும், மெட்ரிக் பாடத்திட்டங்கள் தரம் மிகுந்ததாகவும் இருப்பதாகவும் சமச்சீர் முறையில் தரம் குறைப்பதால் என்ன லாபம் என்று கேட்கிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------

இந்த தரம் வாய்ந்த கல்விச் சாலைகளில்  7 வகுப்பு மாணவன் அரசுப் பள்ளியின் 12ம் வகுப்பு மாணவனுக்குச் சமம் என்றால் அவன் நேரடியாக பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது ஏதாவது கல்லூரி யில் பட்டப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப் படுவானா? அல்லது வெட்டியாக இன்னும் ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டுமா? தேவையே இல்லை என்னும் போது ஐந்து ஆண்டு படிக்கும் படிப்பு தரம் உயர்ந்ததாய் இருந்தால் அதனால் என்ன பயன்?

அல்லது தேவையே இல்லாத விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் கல்வி முறை எப்படி தரம் உயர்ந்ததாய் கருதப் படும்?

தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்தால் இந்திய ஆட்சிப் பணிக்கு நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப் படுவானா? இல்லையே அவனுக்கும் அந்த அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவன் படிக்கும் வரை காத்துதானே இருக்க வேண்டியிருக்கிறது? பிறகெதற்கு வெட்டி வேலை?

கவுண்டமனி பாஷையில் சொன்னால் இந்த மெட்ரிக் கல்வியால் ஒரே ஒரு நன்மைதான் இருக்கிறது, 10 வது வரை அங்கு படித்து 11,12க்கு மீண்டும் ஸ்டேட் போர்டுக்கு வந்து மீண்டும் படித்து ஆரம்பத்திலிருந்தே ஸ்டேட் போர்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆப்பு வைப்பது. அது இந்த சமச் சீர் கல்வியால் தவிர்க்கப் படுகிறது அல்லவா?

============================================================


எவ்வளவு கற்றுக் கொள்கிறோம் என்பதைவிட  அதை எந்த அளவு உபயோகப் படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.  மிக ஆரம்பக் கல்வியில் எளிய கூட்டல் கழித்தல்,  மொழிப்பாடங்களை பிழையின்றி பேச எழுத கற்றுக்கொண்டாலே போதும். சில வருடங்கள் கழித்து  அடிப்படை அறிவியல் மற்றும் நாம் வாழும் இடம் பற்றிய வரலாறு கற்றுக் கொண்டால் போதும். இன்னும் சில நாட்களில் வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களைக் கற்றுக் கொடுக்கலாம். ( இது இப்போது கூட மிக உயர்ந்த தரம் வாய்ந்த கல்வித்திட்டங்களில் இருப்பதாகத் தெரியவில்லை) .  பின்னர் அறிவியல் கணிதங்களில் சற்று வலிமையைக்கூட்டலாம்.

தரம், தரம் என்று இனிமேலாவது முழங்கிக் கொண்டிராமல் உண்மையைப் புரிந்து கொண்டு குழ்ந்தைகளை நிம்மதியாகத் தூங்க விடுங்கள்.

=======================================================
சில ஆட்கள் கல்விக் கட்டணத்தை பள்ளிகளில் குறைவாக நிர்ணயித்து உள்ளதால் இனிமேல் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்விட்டீஸ் கற்றுக் கொடுத்தல் குறைந்துவிடும் என்று சொல்லிக் கொண்டு சுற்றுகிறார்கள். மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது நல்ல விளையாட்டுகளை ஒழுங்கான முறையில் விளையாடக் கற்றுக் கொடுத்தல், மன ஆரோக்கியத்துடன் இயல், இசை, நாடகம், எல்லா மொழிகளிலும் கற்றுக் கொடுத்தல் நல்ல நகைச்சுவை உணர்வைக் கற்றுக் கொடுத்தல். நான் பயின்ற காலத்தில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளிலும், நுண்கலைப் போட்டிகளிலும்  அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களே முக்கால்வாசிப் பேர்களுக்கு மேலே இருந்தார்கள். மருத்துவக் கல்லூரியிலும் அப்படித்தான். எங்களோடு போட்டி போட்ட க்லை, பொறியியல் கல்லூரிகளிலும் அப்படியே நிலவியது , பின்னர் என்னதான் அந்த விலையுயர்ந்த பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள்.

---------------------------------------------------------------------
நிறையக் கற்றுக் கொண்டு அறிவு புதையல்களாக மாறுவதைவிட, குறைவாகக் கற்றாலும், கற்றதை முழுவதும் உயயோகப் படுத்தும் வகையில் கற்று  சாதித்து வாழும் வாழ்வே சிறந்தது. அதற்கு எந்தக் கல்வி முறை சிறந்தது என்று கூறுங்களேன்

-------------------------------------------------------------------------

சம்ச்சீர் கல்வி  மாநிலத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே தேவையான ஒன்று.

==================================================



சீர் மேவு குரு பாதம்
சிந்தையோடு வாக்கினும்
சிரம் மீது வைத்து போற்றி ஜகமெல்லாம் மெச்ச
ஜெயக்கொடி பறக்க விடும்வீரப் பிரதாபன் நானே

சரி

சங்கத்துப் புலவர் பாட தங்கத் தொழில் போர்ப் படர்க்கும்

வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்

எனக்கு இங்கில்லை ஈடென்ன சொல்லிக் களித்தார்

இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டதாரே

சீரெடுத்து பாடி வாரேன் தானே

அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்


யானையை பிடித்து யானையை பிடித்து

ஒரு பானைக்குள் அடைத்து வைக்க

ஆத்திரப் படுபவர் போல் அல்லவே

உம் தாரம்பக் கவி சொல்லுதே புலவா

வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி

புலியைப் பிடித்து தின்ன

புறப்பட்டக் கதை போல் அல்லவா

தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா


பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்

கோதானம் உண்டு பற்பல தானங்கள்

இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்

கேள்விக்கு பதிலை கொண்டா


உடைச்சி ஏறிவென் ரெண்டா

உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா

அப்புறம் பறக்க விடுவேன் செண்டா

ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி


சொல்றேன்

எத்தனை தானம் தந்தாலும்

எந்த லோகம் புகழ்ந்தாலும்

தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானந்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்


சொல்லிட்டான்

கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே

பாத்துக்கடா சரிதான்


அன்ன சத்திரம் இருப்பது எதனாலே

பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே

எப்படி

பரதேசியாய் திரிவது எதனாலே

ம்ம்ம்....அவன் பத்து வீட்டு

சரி ..... வேணாம்

அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே

தம்பி இங்க கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ

புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
கத்தி
இல்ல
கோடாரி
இல்ல
ஈட்டி
ம்ஹூம்
கடப்பாரை
இல்லை
அதுவுமில்லையா

அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே
நீயே சொல்லப்பா


உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது

பாடல் வரிகளுக்கு நன்றி;-பூங்குழலி

நெஞ்சோடு நெஞ்சு மோதிய அனுபவம் .., 10-5-10

அண்ணாச்சியின் மனைவி தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கேட்டவுடன்(சுட்டி) அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.  அரசல் புரசலாக திருமணத்திற்கு முன் தற்கொலை முயற்சியெல்லாம் மேற்கொள்ளப் பட்டது. அவர்கள் இருவரின் காதலும் தெய்வீகமானது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்த கதை ஒரே நேரத்தில் காமடி பீஸ் ஆனதில் அண்ணாச்சிக்கும் துளி கூட வருத்தம் இல்லை. அவர் எப்போதும் எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்.

மகிழ்வுந்து அப்படியே சிங்காரப் பேட்டைக்குள் நுழைந்து அங்குள்ள நண்பரின் வீட்டில் இரவு அடைக்கலம் ஆனோம்.  அன்றிரவு என்ன நடந்தது என்பது போனவர்களின் நினைவுச் செல்களில் திரை போட்டு மறைக்கப் பட்டு விட்டதால் மறுநாள் காலையில் வெகுசீக்கிரத்திலேயே எழுந்து விட்டோம்.  குளித்து தயாராகி ஏலகிரியை நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.

பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்க திருப்பத்தூரில் சாப்பிடும் முடிவை சற்று முன்னேயே வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வழியிலேயே கடையை தேடி கண்டுபிடித்தோம். இடைவெளியில் இருந்த ஓரளவு நல்ல கடையில் சாப்பிட அமர்ந்தோம்.  ஒவ்வொருவருக்கும் மூன்று இட்லிகளும், விருப்பப்பட்ட வகையில் ஒரு தோசையும் கூடுதலாக வடையும் சாப்பிட்டோம் சிலர் இந்த அளவுகளில் சற்று கூடுதலாகவே சாப்பிட்டனர். மொத்தம் ஐந்து பேர். பில் கேட்டபோது தலையே சுற்றிவிட்டது. இவ்வளவுக்கும் சேர்த்து மொத்தம் அறுபது ரூபாய்.  நீண்ட தூர பேருந்து நிறுத்தம் செய்யும் இடங்களில் ஒருவர் சிற்றுண்டி மட்டுமே சாப்பிடும் பணத்தில் ஐந்து பேர் சாப்பிட்டு இருந்தோம்.

மகிழ்வுந்தில் பயணம் செய்தோம் செய்தோம், செய்தோம்.  ஏலகிரி மலையின் அடிவாரத்திற்கு சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் குரங்குகள் வந்து சேர்ந்தன. பழனி மலைக்கே மீண்டும் வந்த உணர்வோடு மலைமீது ஏறத் தொடங்கினோம். ஒவ்வொரு வளைவுக்கும் பாரி, ஓரி என்ற வள்ளல்கள் பெயரும் கபிலர், ஔவை என்று புலவர்கள் பெயராக மொத்தம் 14 பெயர்களில் வைத்திருந்தனர்.

எங்களுக்கு ஒதுக்கப் பட்ட்டிருந்த விடுதி அறைகளுக்குச் சென்று மீண்டும் ஒருமுறை தயாராகிக் கொண்டு  கருத்தரங்கு நடந்த டான்பாஸ்கோ பள்ளிக்கு வந்து சேர்ந்தோம்.

=========================================

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதானா..,

அண்ணாச்சியோட டேலண்ட்

இதே தளத்திலும் 

============================================

கூட்டு உழைப்பு - இருதயக் குறைபாடு - தொடர் சிகிச்சை

 

தமிழகத்தில் முதன் முறையாக.., 

 கருத்தரங்குத் துளிகள்

http://ruraldoctors.blogspot.com/  

தளத்திலும் எழுதியுள்ள கருத்தரங்கு பற்றிய பிற இடுகைகள். படித்துப் பார்க்க தொடுப்புகள் கொடுத்துள்ளேன்.

============================================================
கருத்தரங்கில் பேசப் பட்ட விஷயங்களைப் பற்றி தனித்தனி இடுகைகளாக கொடுக்கும் எண்ணம் இருப்பதால் அவற்றைப் பின்னர் பார்ப்போம்.

கருத்தரங்கில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்களில் ஒன்று  இது. கல்லூரிக்கால நண்பர்கள் இருவர் சந்தித்துக் கொண்ட காட்சி நாமெல்லாம் நம்ப முடியவில்லை. சினிமாட்டிக்கான கற்பனை என்றெல்லாம் சொல்லும் வண்ணம் அமைந்த ஒரு காட்சி.  இரண்டு நண்பர்கள் வேகமாக ஓடி வந்து ஒருவர் நெஞ்சில் மற்றவர் மோதி தங்கள் பாசத்தை பரிமாறிக் கொண்டனர்.  அவர்களது வேகத்தை நேரில் பார்த்தால் மட்டுமே புலப் படும் என்றுதான் நினைத்திருந்தோம் சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் அந்த செய்தியைக் கேள்விப் படும் வரை.  மோதியவர்களில் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று முறை சிறந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான விருதை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வாங்கியவர். அவருக்கு இரண்டு விலா எலும்புகளில் விரிசல் ஏற்பட்டு விட்டதாம். அவ்வளவு வேகத்தில் இருவரும் மோதியிருந்தார்கள் . பார்த்தவர்கள் கிலியடையும் வகையில்

============================================================

கருத்தரங்கில் நாங்களும்  சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்க இருந்ததால் போன உடன் சம்மந்தப்பட்ட பொறுப்பாளரைச் சந்தித்து எங்களுக்கான நேரம் கேட்கச் சென்றோம்.

அப்போது

புதிய நண்பர்;  எங்களுக்கு எப்போங்க நேரம் ஒதுக்கி இருக்கீங்க?

பொறுப்பு அலுவலர்:  உங்களுக்கு ஹால் 2, தேநீர் இடைவேளைக்குப் பிறகு

புதிய நண்பர்:-  ஹால் 2 தனியா இருங்குங்க. எங்களுக்கு ஹால் 1. கொடுங்க

பொ. அ. :-  இல்லைங்க பார்த்துத்தான் போட்டு இருக்கோம்.

புதிய நண்பர்:- அங்க கூட்டமே வராதுங்க. தனியா இருக்கு

பொ.அ. கவலைப்படாதீங்க. நாங்க பாதிப் பேர பிரிச்சு அங்க அனுப்புவோம்

புதிய நண்பரின் நண்பர்:- புது கோட் சூட் டெல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கான். கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க.

பொறுப்பு அலுவலர் டென்சனாகி விடுகிறார். வாங்க சார் பார்த்துக்கலாம்.

.......................................

பிற்பகல் கட்டுரை சமர்ப்பித்த பின்னர்.

அதே நண்பர்கள், பொறுப்பு அலுவருடன் பேசும் காட்சி

பொ. அ. :- பார்த்தீங்களா சார். எவ்வளாவு கூட்டம். நீங்க என்னமோ கூட்டமே இருக்காதுன்னு சொன்னீங்க. இப்ப என்ன சொல்றீங்க!

புதிய நண்பரின் நண்பர்:-  எல்லாம் சரி மேடம். எவ்ளோ கூட்டத்த அனுப்பின நீங்க எங்கள அனுப்பாம விட்டுட்டீங்களே..........................

பொ. அ. பரிதாபமாக பார்க்கிறார்.
புதிய ந. ந :- எங்களுக்கு நாளைக்காம். பார்த்து அப்பவும் கூட்டத்தை அனுப்புங்க

================================================================

நான்கைந்து ஆண்டுகாலம் கழித்துப் பார்க்கும் தோழிகள்  பேசிக் கொண்டிருக்கும்போது

உன் வீட்டுக்காரர் என்ன பண்ணுறார்டி?

M.D.(psychiatry) பண்ணுறார்.

உங்கூட குடும்பம் நடத்துறார்ல. கண்டிப்பா தங்கப் பதக்கம் வாங்கிடுவார்.

============================================================

ஏங்க்கா நான் கொடுத்த கிரீம் எப்படி இருந்துச்சு. ( இந்த கும்பல் எம்.எல்.எம் மூலமாக பொருட்கள் விற்கும் கும்பல் போல)

அதை ஏண்டி கேட்கிற. போட்ட உடனே முகமெல்லாம் அலற்சி ஆகி வீங்கிப் போச்சு.

இன்னொரு தோழி: பேசாம வேற யாருக்காவது கொடுத்திடு

எப்படிடி. 2000 போட்டு வாங்கி இன்னொருத்தருக்கு சும்மா கொடுக்கறது

இன்னொரு தோழி( அதே) : அப்ப நீயே டெய்லி போடு. மூஞ்சி வீங்கிட்டு சுத்து
=========================================================

இது போன்று பல சுவையான ஒட்டுக் கேட்டல்களுக்குப் பிறகு சான்றிதழ்கள் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு நாங்கள் திரும்பும்போது எங்களுக்கே தெரியாமல் எங்களைப் புகைப் படம் எடுத்து எங்களுக்கு வழங்கி அசத்தினார்கள் அமைப்புக் குழுவினர்.

எங்களை முதலிலேயே புகைப்படம் எடுத்தது எங்களுக்கு தெரியாது,. ஆனால் எங்களுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை புகைப்படக்காரர் நிறுத்தி நிதானமாக படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த நண்பர் அவரை அழைத்து எங்களையும் இதே மாதிரி படம் எடுப்பீர்களா? நாங்களும் மேக்கப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறோம் என்றார். புகைப்படக்காரர் அவரையும் நிறுத்தி நிதானமாக எடுத்துக் கொண்டிருந்தார்,  எங்களை படம் எடுத்தது நினைவில் இருந்தாதாலோ என்னமோ எங்கள் பக்கம் அவர் திரும்பவே இல்லை..


மொத்தத்தில் பயணம் சுவையாகவே இருந்தது.

============================================================



=======================================================================



=====================================================================



=========================================================================



====================================================================
சில திரைப்பட காணொளிகளை இணைத்திருக்கிறேன். மின்னஞ்சல் மூலம் வாசிப்பவர்களுக்கு ஏனோ இந்த காணொளிகள் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் தளத்திற்கு வந்து கண்டுகளிக்காறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

Saturday, May 8, 2010

ரஜினியின் பாதையில் நம்ம ஊர் சாமியார்கள்.

ரஜினியே பல நேரங்களில் சாமியார் மாதிரி நடந்து கொள்வார்.  அவரது உள்ளக் கிடக்கையிலிருந்து பாபா கதைகூட எழுதினார்.  ரஜினியின் வழியில் நடந்து வரும் சாமியார்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

========================================================

எஜமான்

வானவராயருக்கு குழந்தை இருக்காது. அவரது எதிரி வல்லவராயன், வானவராயரின் ஆண்மையில் சந்தேகம் எழுமாறு பேசுவார். அதைக் கேள்விப் பட்ட வான்வராயரின் பக்தை, விசுவாசி அவர் தன்னைக்கெடுத்து விட்டதாகக்கூறி   பஞ்சாயத்தில் நிறுத்திவிடுவார்.  அந்தக் காட்சியில் சாட்டையால் அடிப்பதாக நடித்தத பின் ஐஸ்வர்யா பட்ட பாடு.  அட.... அட... கடைசியில் வான்வராயர் அடிவாங்கும் காட்சியே வெட்டப் பட்டு விட்டது. 

வானவராயரின் ஆண்மையை பற்றி நல்ல எண்ணம் ஏற்பட ஒரு பக்தை தன்னைத்தானே தாழ்த்திக் கொண்ட நிகழ்வு  அன்று.

இன்று:-

நெற்றி நிறைய பொட்டு வைத்த, மாராப்பு  போட்ட ஆடையை அணிந்த ஒரு நபரை ஆண் என நிருபிக்க ஒரு பக்தையின் மானம் ரூ 150/= க்கு விலைப் பேசப்பட்டது.

பழைய படங்களில் ரஜினி ஏதாவது ஒரு பானத்தைக் குடித்த உடன் சுறுசுறுப்பாக செயல்படுவார். அது கூட நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
===================================================================

ரஜினியின் பல படங்களில் உன்வாழ்க்கை உன் கையில் வசனம் இடம் பெற்று வரும். பாஷாவில் ஆட்டோவில் அந்த வாசகம் எழுதப் பட்டு இருக்கும். நாளை ஒரு பத்திரிக்கையில் ஒரு சுவாமிஜி உன் வாழ்க்கை உன் கையில் என்று ஒரு தொடர் எழுதப் போகிறார்.






=============================================================

ரஜினி அவர்களை சாமியார்களே பின் பற்றுகிறார்கள்.

Saturday, May 1, 2010

மானஸ்தன் மகள்

அந்த நாய் வீட்டிக்கெல்லாம் பொண்ணக்கொடுக்க முடியாது உறுதியாக இருந்தார் குப்புசாமி செல்லக்கிளியின் தந்தை

செல்லக்கிளிக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்திருந்தார்கள். அவள் விருப்பப்படியே அவளது மாமன் மகன் சின்னராசுவையே மணமுடிக்கவேண்டும் என்று அவளது தாயார் நினைத்தார். ஆனால் செல்லக்கிளியின் தந்தைக்கு இதில் துளிகூட விருப்பம்மில்லை.

ஆனால் குப்புச்சாமியின் பேச்சு சபையேறவில்லை. அப்படியே சபையேறினால் கூட தாயம்மாவால் அந்த சபையே கலைத்துவிடப் படக்கூடிய அளவில் இருந்தது.

நீங்க பண்ணுனக் கூத்துக்கு எங்கண்ணந்தான் பொண் எடுக்க கூச்சப் படணும். அவரே அதப் பத்தி கவலைப் படாம பொண்ணுக் கேட்டு வரேண்ணு சொல்லிட்டார். தவிரவும் அவர மீறி நம்ம இனத்தான் எவனும் பொண்ணுக் கேட்டு வர மாட்டான். தெரியுமில்ல.

தாயம்மாவின் ஆதிக்கம்கொஞ்சம் அதிகம்தான்.

இதிலயே தெரிஞ்சிக்கடி. நம்ம பொண்ணு வாழ்க்கைய சீறழிக்கணும்னே திரியறானுகடி  குப்புச்சாமி குமுறினான்

வாய மூடுய்யா, எங்கண்ணூட்ல உம்பொண்ண தங்கம் போல வைச்சு பார்த்துக்குவாங்க நீ ஓரமா கிட

ஒரே அடக்காய் அடக்கிவிட்டாள் தாயம்மா

தாயம்மாவுக்கு குப்புச்சாமியின் அப்பா, அம்மா, தம்பி, அக்கா அனைவரும் ஆதரித்தனர். தவிரவும் செல்லக்கிளிக்கு பிடித்த மாப்பிள்ளையாதலால்  அனைவருக்கும் மகிழ்ச்சியே.

ஒரு சுபயோக சுப தினத்தில்  செல்லக்கிளியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் தங்க ராசு. அன்றைய தினத்தில் பற்பல சடங்குகள் நடந்தேறின. ஒரே ஊர் என்பதாலும் அந்த ஊரைச் சுற்றியே அனைத்துச் சொந்தங்களும்   இருந்ததாலும் மிகப் பெரிய கும்பல் கூடி  குலாவிக் கொண்டிருந்தது குப்புச்சாமியைத் தவிர.

மாலை மயங்கும் நேரம்.  செல்லக் கிளியின் கண்களில் மையிட்டு மையலுக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தனர்.  பூச்சூடி புதுவாழ்வு பூக்க தயாராகிக் கொண்டிருந்தாள்.

செல்லக்கிளி உங்கப்பன் உங்கிட்ட ஏதோ பேசணுமாம். அப்பத்தாக்கிழவி சொன்னாள். புடிக்காத கல்யாணமா இருந்தாலும் குப்புச் சாமி பாசக்காரண்டி. கடைசில மகள் பின்னாடியே சுத்தி சுத்தி வரான் பாருடி. கிழவு குப்புச் சாமிக்கு ஆதரவு அறிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள்.

பெத்த மனம் பித்து,.பிள்ளை மனம் கல்லுண்ணு சும்மாவா சொன்னாங்க,  நேரத்துக்கு ஒரு சொலவடை சொல்லியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒரு பெண்மணி வாய்ப்பை உபயோகப் படுத்திக் கொண்டாள்

உங்கப்ப போதையில இருக்காண்டி. அவன் கோபத்தை கிளறிறாத! கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு உடனே வந்துடு. விவரமான ஒரு கிழவி யோசனை சொல்லி அனுப்பினாள்.

அந்த தோட்ட வீட்டின் ஒரு ஓரத்தில் மரத்தடியில் குப்புச்சாமி அமர்ந்திருந்தான்.  அவனைப் பார்த்ததும் செல்லக்கிளி  குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தாள்.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXiubYDTFe8lBUabQx2AJHr8fzEvTNOkzybwsKuHce4xW3bifCFPF9H-i3nM5d0EbBy5z4llkJlo_v-QbHihiHdwFEWZd_JxhZidzA8OqFVK8pemIyZ9WsH_GvbNEWi-vMe8Cw-_sSepY/s400/Sangeetha-Bridal-Designer-Saree.jpg


ஏம்மா, நான் அவ்வளவு தூரம் சொல்லியும் என்னை மதிக்காத வீட்டுக்கு போகப் போறியாமா?

அப்பா, மாமன் ரொம்ப நல்லதுப்பா

அப்ப நான் கெட்டவனா, உன்ன வேற யாரும் பொண்ணுகேட்டு வரவிடாம தடுத்து வைச்சிருந்தானுகம்மா

இல்லப்பா! யார் வந்திருந்தாலும் நான் கல்யாணத்துக்கு ஒத்திட்டு இருந்திருக்க மாட்டேன்ப்பா

அப்ப என்னைய மதிக்காத வீட்டுக்கு நீ போகத்தான் போறியா!

செல்லக்கிளி அமைதியாக நின்றிருந்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சடாரென்று ஒரு பாட்டிலை எடுத்து முன் வைத்தான் குப்புச்சாமி .

அது கொடிய விஷம்

அந்த வீட்டுக்கு போன நிமிஷமே இத குடிச்சிடுவேன். என் காரியத்துக்கு கூட நீ வர க்கூடாது.

முழு போதையும் பிடிவாதமும் நிறைந்த தன் தந்தை என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவன் என்பதை தெரிந்த செல்லக்கிளியின் உடல் முழுவதும் நடுங்க ஆரம்பத்தது.

சற்று நேரம் நடுங்கியவள் சட்டென்று அந்த பாட்டிலை திறந்து முழுவிஷத்தையும் ஒரே மடக்கில் குடித்தாள் செல்லக்கிளி.

குடித்த சில வினாடிகளில் மயங்கிச் சரிந்தாள்

செல்லக் கிளியின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஓ.............வென கதறி அழ ஆரம்பித்தான் குப்புச் சாமி. அவன் அலறலைக் கேட்டு அந்த ஊரே அவன் பக்கம் திரும்பியது

=========================================

இந்தக் கதை இத்தோடு முடிவடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் நேராக ஓட்டுப் போடும் இடத்திற்கு சென்று விடுங்கள்.  ஆனால்  தொடர்ந்து படிக்க விரும்புவர்கள் மேற்கொண்டு  படிக்கலாம் . கடைசியில் டிஸ்கியையும் படித்துவிடுங்கள்

=====================================================


அந்த ஊர் வளர்ந்தும் வளராத ஒரு இயற்கை கொஞ்சும் ஒரு சிற்றூர். அந்த ஊரில் ஒரு மருத்துவர் குடியிருந்து வந்தார்.  அவர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவந்தார், ஓரளவு வசதியும் நல்ல இயற்கைச் சூழலும் இருப்பதால்  அந்தக் கிராமத்திலேயே தங்கி வந்தார்.  அவருடன் அவரது வயதான பெற்றோரும் தங்கி இருந்தனர்,

அன்றைய் இரவுப் பொழுதில் சாப்பிட்டு விட்டு அப்போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.. அப்போது வீட்டு வாசலில் சில இளைஞர்கள் டாக்டர் சார், டாக்டர் சார்,  தளபதி சூர்யா ஸ்டைலில் கூப்பிட்டுக் கொண்டிடுந்தனர்.

சார் இந்த பொண்ணு விஷம் சாப்பிட்டுட்டா ஒரு ஊசியப் போடுங்க

அந்தப் பெண்ணைப் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது,  ஏறக்குறைய ஆழ்மயக்க நிலைக்கு சென்று விட்டாள். ஏதாவது சகல வசதிகளும் நிறைந்த மருத்துவமனைக்கு போனால் மட்டுமே காப்பாற்றுவது சாத்தியம்

ரொம்ப மோசமான நிலைமைல இருங்காங்க,
உடனே டவுனுக்கு கூட்டிட்டு போகணும்.

நீங்க எதாவது பண்ணுங்க டாக்டர்.
 உங்க கிளினிக்குக்கூட போயிடலாம்.   வாங்க டாக்டர்.

அங்க அவசரத்துக்கு பார்க்கறமாதிரித்தான் மருந்து இருக்கு. இது டாக்டர்

டாக்டர் இதுதான் அவசரம். டவுன் போற்துக்குக் கூட தாங்குமான்னு தெரியலயே

கொஞ்சம் சுயநினவு இருந்தாக்கூட வயிறு கழுவலாம் இப்ப அதக்கூட பண்ண முடியாது, உடனே டவுனுக்குப் போனா ஏதாவது பண்ணலாம். கிழம்புங்க.

டாக்டர் ஏதாவது பண்ணுங்க.

போலீஸ் கேசெல்லாம் ஆகாதுங்க . நீங்க ஊசி போடுங்க டாக்டர்.

இந்த அம்மாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுல வைச்சு வைத்தியம் பார்க்கணும். அதுக்கு வழி செய்யுங்க இது டாக்டர்.


நாங்க இவ்வளவு கெஞ்ச்சிட்டு இருக்கோம். நீங்க எதுவும் காதுலயே வாங்க மாட்டீங்கறீங்க


இவர் இப்படியெல்லாம் கேட்டா ஒண்ணும் செய்ய மாட்டார்.நாம வேற வழிக்குத் தான் போகணும்,  அடிங்கடா


அந்த வாடகைவீட்டின் முகப்பு மற்றும்சில பணியாளர்கள் தாக்கப் பட்டனர்.


சற்று நேரத்தில் கோபம் அடங்கிய மற்றவர்கள் விஷம் குடித்த பெண்ணை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். . ஆனால் வழியிலேயே அந்தப் பெண்ணின் உயிர் பிறிந்தது,


டிஸ்கி;-   இந்தக் கதையை ஒன்றாகப் படிப்பவர்கள் படிக்கலாம். இரண்டாகப் பிரித்து இரண்டு கதையாக படிப்பவர்களும் படிக்கலாம். தேவைப் பட்டால் நமக்கென்ன என்று மூன்றாவது கதையை கண்டுபிடித்து படிப்பவர்கள் படித்துக் கொள்ளலாம்

டிஸ்கி:- இதை படித்த பின்னர் ஓட்டுப் போடலாம், பின்னூட்டம் போடலாம் ஏதாவது ஒரு வாய்ப்பு அல்லது இரண்டு வாய்ப்பையுமே உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails