Saturday, January 31, 2009

தருமியைப் பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வருகிறதா...

திருவிளையாடல் படம் பார்த்திருக்கிறீர்களா.... (பார்க்காவிட்டால் இன்று பார்த்துவிடுங்கள்). அதில் இன்றும் மனம் கவர்ந்த பாத்திரம் எது என்று நினைத்துப் பாருங்கள். சந்தேகமே இல்லாமல் தருமியாகத்தான் இருக்கும். மற்ற பாத்திரங்கள் அந்த கதையில் ஈடுபாடு உள்ளவர்களையும் கதாநாயக நாயகிகளின் ரசிகர்களுக்கும் மட்டுமே பரிச்சமாயிருக்கும். ஆனால் தருமி எல்லோரையும் சென்றடைந்திருக்கும். அந்த பாத்திரத்தை நாகேஷ் அவர்களைத்தவிர வேறு யாரும் செய்திருந்தால் அப்படி ஒரு வெற்றி அடைந்திருக்குமா என்றால்......

அந்தப் பாத்திரத்தை மட்டும் பாருங்கள். ஒரு ஒப்புக்கு வரும் பத்தோடு பதினொன்றான பாத்திரம். பாட்டை வாங்குகிறார். சபையில் பாடி திரும்பிவருகிறார். வந்து நாயகனிடம் தருகிறார். அப்புறம் கதை அதன்போக்கில் செல்கிறது. இதில் ஒரு நகைச்சுவையாளனால் என்ன செய்து விட முடியும்? ஆனால் சாதித்திருக்கிறாரே....

அந்த பாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய சுவைதான் எத்தனை? அந்த பாத்திரத்தைப் பார்த்து நீங்கள் சிரித்திருந்தால் உங்களுக்கு இரும்பு மனம் என்றுதான் சொல்லவேண்டும்.

முதல் காட்சியில் பரிசுத்தொகையைக் கேட்டு ஏற்படும் பிரமிப்பு... அந்த பிரமிப்பே அடுத்த காட்சியில் அவலமாக மாறும் நிலை. ஒரு ஏழையின் புலம்பலாக மாறும். ஒட்டுமொத்த ஏழ்மையின் குரலாக மாறி ஒலிக்க வைத்திருப்பார். அடுத்த காட்சியில் மெத்த படித்த மேதாவியுடன் போட்டியிடும் சாதாரணனாக அனைவரின் பரிதாபத்தையும் பெறுவார்.

சரியோ.. தவறோ.. அந்தப் பாத்திரம் பரிசினைப் பெற வேண்டும் என்ற பரிதவிப்பினை அனைவர் மனதிலும் ஏற்படுத்தி இருப்பார்.


நான் பார்க்கறதுக்கு சாதாரணமாத்தான் இருப்பேன். ஆனால் என் புலமையைப் பத்தி உனக்குத்தெரியாது..

எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்
...

கொஞ்சம் வசனநடையில் எழுதறேன். இருந்தாலும் புலவன்னு ஒத்துக்கறாங்க.....

எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொள்ளுங்கள்
..

அங்க ஒருத்தன் இருக்கான். அவன் தான் உன்பாட்டை குற்றம் சொன்னான்.

பேசறதெல்லாம் பேசு. எழுதுபோது மட்டும் கோட்டை விட்டுறு.


இந்த வசனங்களையெல்லாம் வேறொருவர் எழுதி இருந்தாலும் அதை பேசும் தொனியில் ஆயிரம் அர்த்தங்களை தந்தவர். நாகேஷ்.

வசனங்களை விடுங்கள்.


கோவிலில் நுழைந்த உடன் பாடல் எழுதுவதறாக அவர் துடிக்கும் துடிப்பு.

தமிழ்சங்கத்தில் நுழைந்த உடன் மன்னன் யாரென தெரியாமல் அனைவருக்கும் வணக்கம் சொல்லும் பாங்கு.

மொழியில்லாமல் அனைவரின் மனதிலும் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்த பிறவிக் கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

Sunday, January 25, 2009

எந்திரன் உங்களுக்காக ஒரு பழைய கதை

ஊழல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தனது முகங்களைக் காட்டி வளர்ந்துகொண்டே இருக்கிறது. கல்தோன்றி மண்தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு விதமான மோசடிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதனடிப்படையில் பல்வேறுவிதமான இலக்கியங்களும் இதிகாசங்களும் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

நவீன கால படைப்பாளிகளில் ஷங்கர் மிகவும் முக்கியமானவர். நாட்டில் நடக்கும் பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி மக்களை விழிப்புணர்வு கொண்டுவருவதில் ஷங்கரின் படங்களுக்கு தனி இடம் உண்டு. அதைப் போன்ற ஒரு கதைதான்


கம்ப்யூட்டர் ஊழலுக்குள் எந்திரன்.


முன்குறிப்பு: இந்தக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.


சிறுவன் ரஜினி கூட்டல் கணக்குப் போடுவதற்கு பாசிமணிகளை உபயோகப் படுத்துவதிலிருந்து படம் துவங்குகிறது. அடுத்த காட்சியில் எல்லோரும் வாய்ப்பாடு உபயோகப் படுத்தும் போது சிறுவன் ரஜினி கால்குலேட்டர் உபயோகப் படுத்துகிறார்.

கல்லூரிக்குச் செல்லும்போது பைக் ஓட்டுவதற்கு நவீன சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். தனியாக ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி துவக்குகிறார். அப்போது கார் ஓட்ட தனி சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். அதில் பல்வேறு நவீன வசதிகளை வைத்திருக்கிறார். ஒரு சூப்பர் கம்ப்யூட்டராக அதை உருவாக்கி உபயோகப் படுத்துகிறார். ஆட்டோ அப்டேட் வசதியை உருவாக்கி வைக்கிறார்.

அவரது கம்ப்யூட்டர் கம்பெனி உலக அளவில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கிறது. உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு ஊர்களை தேர்ந்தெடுத்து தன் சொந்த செலவில் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கிறார். உலக மக்கள் அனைவரும் ரஜினிகாருவை புகழ்ந்து விழா எடுக்கிறார்கள்.
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா"
பழைய பாட்டை ரீமிக்ஸ் போட்டு ஆடுகிறார்கள்.

பாட்டு முடிந்ததும் ரஜினிகாரு கைதுசெய்யப் படுகிறார். அவர்மீது சரமாறியாக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. கழிப்பிடம் கட்ட குழிதோண்டியதில் கிடைத்த மண்ணை நாடுவிட்டு நாடுதாண்டி கொட்டியதாக கணக்குக் காட்டி பலகோடி ரூபாய்கள் வருமான வரி ஏய்ப்பு செய்த்தாக குற்றம் சாட்டப் படுகிறது. அவர் கைது செய்யப் பட்டதால் அவரது கம்பெனியின் ஷேர் மதிப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. அதனால் அப்பாவி கிராமத்து மாணவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

ரஜினியின் வீட்டை சூறையாடுகிறார்கள். அவரது தானியங்கி சூப்பர் கம்ப்யூட்டர் சாதனம் தூக்கி குப்பை வண்டிக்குள் போடப் படுகிறது. குப்பை வண்டியில் போகும் சாதனம் ஆட்டோ அப்டேட் ஆகிறது. மனித உருவத்தைப் பெருகிறது. குப்பை வண்டிக்குள் இருந்து ரஜினியைப் போலவே உருவ அமைப்பைக் கொண்ட எந்திரன் வெளியே வருகிறார். ( ஜீன்ஸ் படத்தைவிட அற்புதமாக வரவேண்டும் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் அனிமேசன் காட்சிகள் அமெரிக்காவில் உள்ள நானோஹார்டு கம்பெனியில் செய்து வருகிறார்கள். இவர்கள் பில்கேட்ஸுடன் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

எந்திரன் ரஜினி வெளியே வந்தவுடன் துப்பறியும் பணியில் ஈடுபடுகிறார். பிபாசா பாசுவின் நடனம் பார்ப்பதற்காக ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு ஒரு உண்மை தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் தூண்டுதல் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற உண்மையை அவர் கண்டறிந்த உடனேயே பிபாசா கடத்தப் படுகிறார். பிபாசாவைப் பின் தொடர்ந்து எந்திரன் செல்கிறார். பிபாசாவை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று அமெரிக்க ஜனாதிபதிமுன் நிறுத்துகிறார்கள். ( அமெரிக்க ஜனாதிபதி பாத்திரம் தமிழ்திரையில் வருவது இந்த ஆண்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது).

அங்கே பிபாசா மீண்டும் நடணம் ஆடுகிறார். அந்த நடனத்தைக் காண அவரின் பால்ய நண்பர்களும் வருகிறார்கள். அவர்களைப் பார்த்த எந்திரன் அதிர்ச்சியடைகிறார். அவர்களில் ஒருவர் வினுசர்க்கரவர்த்தி. கதையில் அடுத்த திருப்பம் வருகிறது.

..........................................................................................................

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ரஜினி கல்லூரியில் படித்துவருகிறார். உலக அளவில் நடக்கும் அறிவியல் வினாடிவினால் வெற்றி பெற்றுவிட்டு விமானத்தில் வருகிறார். அப்போது ஒருபெண் அவரைப் பார்த்த உடன் காதல் கொண்டு பாட்டு பாடுகிறார். ரஜினியிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.
நான் தான் மிஸ். வேர்ல்டு.
என்பதைக் கேட்ட ரஜினி தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பி விடுகிறார். ரஜினி படிக்கும் கல்லூரிக்கு வேலைக்கு சேர்ந்து விடுகிறார் ஐஸ்வர்யா . ரஜினியை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

பணம் அதிகமாய் இருந்தால் ராத்திரி தூக்கம் வராது
பொண்டாட்டி
அழகாயிருந்தால்

எப்போமே தூக்கம் வராது
என்று சொல்லிவிட்டு தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்கிறார். கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் துவக்கி உலக அளவில் பெரிய தொழிலதிபர் ஆகிறார். அவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் மனைவி சமைத்துக் கொடுத்த உணவையே சாப்பிடுகிறார்.

ரஜினி திருமணம் செய்து கொள்ளமுடியாத ஐஸ்வர்யா கிராமத்தில் போய் தவம் செய்யத்தொடங்குகிறார்.

..................................................................................................

ஐஸ்வர்யாவின் தந்தைதான் வினுசர்க்கரவர்த்தி. தன் மகள் சாமியார் ஆக காரணமாய் இருந்த ரஜினியைப் பழிவாங்க தனது பால்ய நண்பன் அமெரிக்க ஜனாதிபதியை அனுகிறார். அவரது செல்வாக்கினைப் பயன்படுத்தி ரஜினியின் கம்ப்யூட்டர் கம்பெனியில் பல ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைக்கிறார்கள்'

அமெரிக்க ஜனாதிபதியை தனியே சந்தித்த எந்திரன் நடந்த உண்மைகளைச் சொல்ல ஜனாதிபதி திருந்திவிடுகிறார். ரஜினியைக் கொல்ல வினுச் சர்க்கரவர்த்தி ஆட்களை அனுப்புகிறார். அவரைக் காப்பாற்ற எந்திரன் பறந்து வருகிறார். வான் வழியிலேயே அவரைத்தடுக்க முயற்சிகள் நடக்கின்றன். பலத்த சண்டைக்குப் பின்னர் முதலாளி ரஜினியும் எந்திரன் ரஜினியும் ஐஸ்வர்யாவின் கிராமத்திற்கு செல்கின்றனர். சண்டை நடக்கிறது. ஐஸ்வர்யா தவம் கலைந்து எழுந்து விடுகிறார். ரஜினியைப் பார்த்து
இன்னும்
கல்லூரி மாணவன் மாதிரித்தான் இருக்கறீங்க
என்று சொல்கிறார். அதற்கு ரஜினி
நீ 94ல தான் மிஸ். வேர்ல்டு

நான் எப்பவுமே மிஸ்டர். வேர்ல்டு


என்று கூறுகிறார். மனம் திருந்திய ஐஸ்வர்யா ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பிக்கிறார்.

சத்தியமே லட்சியமாய் கொள்ளலடா
பாட்டுடன் கதை நிறைவடைகிறது.

Friday, January 16, 2009

விரக தாபத்தில்.... ஓர் உலக சினிமா

இப்பொழுதெல்லாம் நமது திரைப்படங்கள் உலக மக்கள் அனைவரின் பார்வைக்கும் செல்கின்றன. குறைந்தபட்சம் உலகத்தமிழ் மக்களின் சந்தைக்கு வருகிறது. சில நேரங்கள் மக்களின் ரசனை என்பதும் வியாபாரம் என்பதும் வேறு வேறு பாதையில் சென்று விடுகிறது. உலக சினிமா கலைஞர்கள் பல்வேறு விருதுகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏதோ நமக்குத் தெரிந்த சில நுடபங்களை சொல்லிக் கொடுத்து நம் மக்களை விருதுகள் வாங்கி குவிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இடுகை துவங்கப் படுகிறது. உங்கள் அனைவரின் ஒட்டு மொத்த ஆலோசனைகளைப் பெற்று தமிழ் படத்துக்கு ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பதே நமது லட்சியம்.


ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதே அதன் கதையின் காலடியில்தான் இருக்கிறதாம். அதனால் நல்ல கதை வேண்டும். தமிழ் படம் எடுப்பதால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிற்போக்கான கிராமத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். அங்கே இருக்கும் மூட நம்பிக்கைகள், மது மாது இன்னபிற பழக்கங்களை கதையின் அடிநாதமாக கொண்டிருக்க வேண்டும். அதன் தீமைகளைப் பற்றியும் திருத்துவதைப் பற்றியும் படம் எடுத்து விடக் கூடாது. அப்படி எடுத்து விட்டால் இயல்புக்கு மீறிய (லாஜிக் இல்லாத) படமாகக் கருதி நிராகரிக்க படும்.


விதவைகளைப் பற்றி ப்டம் எடுத்தால் அவர்கள் விரகதாபத்தால் வேதனைப் படுவதையும் குடும்பத்தார் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் எடுக்கவேண்டும். குடும்பத்தார் ஆதரவுடன் கடுமையாக உழைத்து குடுப்பத்தை முன்னேற்றுவதாக எடுத்தால் அது வெறும் வியாபார ரீதியான படமாகவே கருதப் படும். தவிரவும் மேலை நாட்டினர் நம்மை இவ்வளவு நல்லவர்களாகவே ஒத்துக் கொள்ளமாட்டார்கள். மது, மாது குடிப்பதை எதிர்க்கும் மனிதர்கள் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே கிடையாது என்ற கருத்துடந்தான் இந்தப் படங்களைப் பார்ப்பார்கள்.
கற்பினைக் காப்பாற்றுவதற்காக பல நாள் பட்டினி என்று படம் எடுத்தால் கொஞ்சமும் நம்பும் படி இல்லை என்று நிராகரித்து விடுவார்கள்.

முதியவர்களை ஒதுக்கித்தள்ளுவது போலவும் அவர்களை கொடுமைப் படுத்துவது போலவும் படம் எடுக்கவேண்டும் அவர்களுக்கு ஆதரவு தரவும் ஆள் இருக்கிறது என்பது படம் எடுப்பது தவிர்க்கப் படவேண்டும்.


பல ஆண்டுகளாக ஒரே ஆளை ஒருதலையாய் காதலிப்பது அதை உள்ளே வைத்துக் கொண்டு உருகுவது எல்லாம் பூ.... போன நூற்றாண்டிலேயே முரளி செய்துவிட்டார் என ஒதுக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது.


கதாநாயகியை கொலை செய்வது என்று முடிவு செய்தால் ஒரு கத்திக்குத்து, தோட்டா உபயோகப் படுத்துவது உலகத்தரம் வாய்ந்த தமிழ் அல்லது இந்திய சினிமாவுக்கு அழகல்ல. கற்பழித்துதான் கொலை செய்யப் படவேண்டும். பலரும் சேர்ந்து கற்பழித்தால் அறிவுஜீவிகளால் பாராட்டப் படும் வாய்ப்பு இருக்கிறது.


குழந்தைகள் பிச்சை எடுப்பது அவர்களை அடித்து கையைகாலை உடைத்து பிச்சை எடுக்க வைப்பது போன்ற நெஞ்சைக் கண்க்கவைக்கும் காட்சிகள் இருந்தால் கூடுதல் மரியாதை கிடைக்கும்.

குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் ஆண்மகன் பாத்திரமே படத்தில் இல்லாமல் இருப்பது கூடுதல் மதிப்பெண் தரும்.

ரத்தம் சிந்திக்கொண்டே இருப்பது , நிர்வாணமாகத்தோண்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றே தீர வேண்டும்.

நிற்பது, நடப்பது, உட்கார்வது, கதவைத்திறப்பது போன்ற காட்சிகள் மிக இயல்பாக எடுக்கப் படவேண்டும். கதவைதிறக்காமல் வீட்டுள் நுழையும் லாஜிக் இல்லாத படங்கள் நிராகரிக்கப் படும்.

நாயகனோ, நாயகியோ மோசமான குணமுடையவர்களாகக் காட்டுதல் நலம். கடைசியில் கொடுமையான முறையில் பிரிவது இன்னும் நலம்.

இதெல்லாம் உலகத்தரம் வாய்ந்த படங்களுக்கான யோசனைகள். உங்களுக்கு தோன்றுவதை நீங்களும் சொல்லுங்கள்.

Thursday, January 15, 2009

நான் பார்த்த படிக்காதவன்

படிக்காதவன் இளம்பருவத்தில் வரும் ரசிகர்களை ஏமாற்றாத படம். முதல் காட்சியிலேயே இரத்தச் சிவப்பினை குளோசப் காட்ட்சியில் காட்டி பயமுறுத்துகின்றனர். அடுத்த காட்சியிலேயே அதனை தக்காலியாக மாற்றி விடுகிறார்கள். டைட்டில் சாங் அற்புதமாக அமைந்திருக்கிறது.

பின்னே சிவாஜிகணேசன் m.p.பாடும் பாட்டென்றால் சும்மாவா.... ஒரு கூட்டுக் குயிலாக... மலேசியா வாசுதேவன் குரலில் பட்டையைக் கிளப்பி இருப்பார். குழந்தைகளாக சூப்பர் தம்பிகள். பாட்டு முடிந்ததும் தேர்வெழுத அவ்ளோ பெரிய சிவாஜி தன்னோட சின்னத்தம்பிகளை அண்ணியிடம் விட்டு விட்டு செல்கிறார்.
அண்ணியின் சொற்கள் தாங்காமல் தம்பிகள் வீட்டைவிட்டு கிளம்பிவிடுகிறார்கள்.

இந்தப் படத்தை முன்னமே பார்த்த காரணத்தாலேயே வெள்ளைச்சாமி அண்ணன் தன் தம்பிகளை அண்ணியிடமிருந்து காப்பாற்றிவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (வானத்தைப் போல).

மூட்டை தூக்கியாவது தம்பிக்கு ரொட்டி வாங்கி கொடுக்கும் உன்னதமான பாத்திரம் சூப்பர் ஸ்டாருக்கு. பின்னி பெடல் எடுப்பார்.

தப்பி வந்த தம்பிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தந்தையாக நாகேஷ். அவரது மகனும், மக்ளும் சூப்பர் அவர்களை அண்ணா என்றே அழைக்கிறார்கள்.

சூப்பர் ஒரு கார் வைத்திருப்பார். அதில் யாராவது போதைப் பொருளுடன் ஏறினால் ஸ்டார்ட் ஆகாது. சிவப்பு விளக்கு எறியும். வயிற்றீல் இருந்தால் கூட எறியும். லக்ஷ்மி ஸ்டார்ட்.. சூப்பர் சொல்லும் வசனம்.. நாங்கள் சைக்கிள் எடுக்கும் போது சொல்வது வழக்கமாய் மாறியது.

காரோட்டியாக மாறி தம்பியை காலேஜில் படிக்கவைக்கிறார். தம்பியின் கல்லூரியை விட்டு வரும்போது சட்டை, பேண்ட், கோட் என எல்லா பாக்கெட்டுகளில் இருந்து பணம் கொடுப்பார். கண்கலங்குவார். தனது புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்களுக்குப் பின் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம்.

தம்பியின் காதலியாக மனைவியாக நீலாம்பரி வருவார். தம்பியை பணக்கார வீட்டு மாப்பிள்ளையாக கேட்கும்போது சுயமரியாதைபேசிவிட்டு தம்ம்பியின் எண்ணம் தெரிந்தபின் திரும்பவும் போய் சம்பந்தம் பேசுவது, தம்பி பாஸ் என்று தெரிந்த பின் குதியாட்டம் போடுவது.. பின்னர் போலி எண்ணை கொடுத்தி ஏமாற்றிவிட்டார் என தெரிந்தபின் தம்பியிடம் போய் நியாயம் பேசுவது,, பின்னர் தம்பியிடம் மூக்குடை பட்டு திரும்பி வருவது என சூப்பர் அசத்துவார்.

தம்பியிடம் அவமானப்பட்டுத்திரும்பி தண்ணியடிக்கச் செலவது, அங்கே அம்பிகாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு பாடும் பாட்டு இன்னும்கூட கல்லூரிகளில் மாணவர்கலால் பாடப் படுகிறதாம் (காரணம் வேறு).

பின்னர் அதே தம்பி சின்ன மாமனாரால் ஏமாற்றப் பட்டு திரும்ப அவர் வீட்டுக்கு திருமபச் செல்ல அங்கே கொலைக் குற்றம் சாட்டப் பட நீதி மன்றத்தில் நிறுத்தப் படுகிறார். அங்கே நீதிபதியாக பெரியண்ணன்.

பெரிய அண்ணனை முதலிலேயே சூப்பர் பார்த்து விடுகிறார். அவர் முன்னிலையில்தான் தம்பிக்கு திருமணமே செய்து வைக்கிறார்.

குற்றவாளியின் பேர் ஊர் கேட்டவுடன் பெரிய அண்ணன் தெரிந்து கொண்டவுடன் கண் கலங்கி மீண்டும் வக்கீலாக மாறுகிறார். கோர்ட் காட்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். ஃபோட்டோவில் இருக்கும் நின்று போன வாட்சைவைத்து உண்மை கொலை குற்றவாளிகளை கண்டறிகிறார்.


கடைசியில் சூப்பர் சண்டை போடாவிட்டால் படம் ஓடுமா.. என்ற சந்தேகம் போல .. ஒரு துரத்தல் சண்டை போட்டு வில்லன் ஜேம்ஸ் பாண்டை பிடித்துக் கொடுக்க அண்ணியும் திருந்த சுபம்.


யப்பா... எவ்ளோ பெரிய கதை. இதுல அம்பிகா.. நாகேஷ். அவர்தம் பிள்ளைகள், வில்லன் செயல்பாடுகள் பத்தி வேற எதுவும் எழுதுல..............

எத்தனை படம் எடுத்திருக்கலாம். ஒரே படத்தில் வைத்துவிட்டார்கள்.

Monday, January 12, 2009

அவசரத்தில் முளைத்த புல்லு

இது கொஞ்சம் அவசரமா எழுதும் பதிவு. நமது வலைஞர்களின் பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது உடனடியாக எழுதத்தோன்றியது.

இது நான் எப்போதோ பார்த்த படம் ..


தந்தை ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றுவார். அவரது கூட்டாளிகள் கெட்டவர்கள்.. அவர்கள் எதிரி நாட்டுக்கு ரகசியங்களை விற்கும்போது மேஜர் தமிழ்மணி பார்த்து விடுவார். அப்போது அவரை கொண்றுவிட்டு அவரை தேசத்துரோகி ஆக்கிவிடுவார்கள். தேசத்துரோகக்குற்றம் சாட்டப் பட்டதால் அவரது வீட்டை சூறையாடி விடுகிறார்கள். மகன் வளர்ந்து பெரியவர் ஆக வளர்கிறார்.

அவருக்கு பழைய கதை தெரிகிறது. தந்தை கூட்டாளி எதிரிகளை தேடுகிறார். ஒருவர் முக்கிய அரசியல் கட்சி தலைவராகவும் ஒருவர் பெரிய தொழிலதிபராகவும் இருக்கிறார். என்னவொரு ஒற்றுமை என்றால் அதில் ஒருவர் ராஜூகாரு மாதிரியே இருப்பார். அவரை பின்னி பெடலெடுப்பார் ஆனந்த்.
இது தாய்நாடு திரைப் படத்தின் கதைசுருக்கம். சத்தியராஜ் இரட்டை வேடத்திலும் ராதிகா, ஸ்ரீவித்யா, நம்பியார், இளவரசன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.


இதேபோல் ஒரு படம் வந்திருக்கிறதாம். அதை இந்திப் படத்தின் ரீமேக் என்று சொல்கிறார்களாம். நம்பாதீர்கள். அது முழுக்க நமது தமிழனுக்கே சேர வேண்டிய பெருமை.

பொங்கல் கொண்டாடும் வீரம்மிக்க தமிழ் இளைஞர்களே..

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன். தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களுக்கும் உணவு வழங்கிக் கொண்டிருக்கிற பஞ்ச பூதங்களுக்கும் நன்றி சொல்லத் தொடங்கிவிட்டனர். தமிழனின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுகளும் நடத்தப் படப் போகின்றன்.

தமிழன் மறந்துபோன தமிழனின் வீர விளையாட்டு ஒன்று இருக்கிறது. அதுதான் இளவட்டக் கல் தூக்குவது. நினைவு படுத்துவதற்கு சில உதாரணங்கள்.
1. முதல்மரியாதை படத்தில் சிவாஜி தூக்குவார். நினைவுபடுத்திப் பாருங்கள். அதற்கு சிறப்பு தீம் மியூசிக் கூட சேர்த்திருப்பார்கள்.
2.விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் தூக்குவார்.

இதையும் மீறி ஞாபகம் வராதவற்களுக்கு சிறிய விளக்கம்.. ஊரின் ஒரு முக்கிய இடத்தில் ஒரு பெரிய கல் இருக்கும். அந்தக் கல்லை தூக்கும் சக்திபடைத்தவனுக்கு மட்டுமே திருமணம் செய்யும் தகுதி இருப்பதாக நினைத்தார்கள். எடைக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இன்று கூட கிராமம்தோறும் அந்தக் கல்லை நிறுவலாம். அதில் சிலநிலைகளைக் கூட கொண்டுவரலாம். கொஞ்சம் கொஞ்சமாக எடைகளை அதிகரிக்கலாம். அதைத்தூக்கும் இளைஞர்களுக்கு ஒரு கவுரவம் கூட கிடைக்கும். மற்ற விளையாட்டுகளைவிட ஆபத்து குறைவு. அதே நேரத்தில் வலிமையை நிரூபிக்கும் வாய்ப்பும் அதிகம். செலவும் குறைவு.

இதனால் யாருக்கும் எந்தவிதமான உடல் உயிர் பாதிப்புகளும் கிடையாது. கவுரவமும் கிடைக்கும்.

எனவே தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழனின் மானம் காக்கவும் தனது வலிமையை நிரூபிக்கவும், மறைந்துவரும் நமது வீரவிளையாட்டாம் இளவட்டக் கல் தூக்குவதை ஊருக்கு ஊர் தெருவுக்கும் தெரு நிறுவ வேண்டும்.

Thursday, January 8, 2009

பட்டிக் காட்டான் தலையில் மிளகாய் அரைக்கிறார்களா...

இதனைப் படிக்க ஆரம்பிக்கும் முன் நீங்கள் ஒரு உண்மையை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள். எனக்கு முதலீடுகள் பற்றியோ பங்கு வர்த்தகம் பற்றியோ எதுவும் தெரியாது. ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி குடிமகன் எப்படியெல்லாம் நினைத்து கொண்டிருப்பானோ அவ்வளவுதான் எனக்கும் தெரியும். (உண்மையில் நான் பிறந்தது, படித்தது இப்போது பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதும் அதே குக்கிராமத்தில்தான் கல்லூரி படிப்பு மட்டும் கோவையில் )


கல்லூரி பேராசிரியர் ஒரு அறிவுரை சொல்லியிருந்தார். சம்பாதிக்கும் பணத்தை பூட்டி வைத்துக் கொண்டிருப்பதற்கு அந்தப் பணத்தை சம்பாதிக்கலாமலே இருக்கலாம் என்று கூறுவார். அவரது அறிவுரைகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். உதாரணமாக நம்மிடம் வேலை செய்யும் ஒருவருக்கு வேலை தெரியவில்லை என்றால் அவருக்கு நாம் சொல்லிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். கழிப்பிடம் சுத்தம் செய்பவருக்கு சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் அவருக்கு சொல்லித்தரும் அளவுக்கு நாம் வேலை தெரிந்திருக்க வேண்டுமாம். அப்போதுதான் ஒரு அமைப்பை நிறுவி நடத்தமுடியுமாம்.

பணி செய்யும் இடத்தில் நிறைய பேர் வருகிறார். நீட்டும் இடத்தில் மட்டும் கையெழுத்துப் போடுங்கள். பங்கு மார்க்கெட் போகும் வேகத்தில் ஒரே நாளில் உங்களுக்கு இவ்வளவு லாபம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். சிறு நகரத்திற்கு{கிராமத்திற்கு தொடர்புடைய நகரம். அவ்வளவுதான் மற்றபடி அங்கு போவதுகூட ஒரு சுற்றுலா போவது மாதிரியான நிலைதான்} அவர்கள் சொல்லும் வார்த்தைகள்தான் வேதவாக்கு. கரும்பு விற்ற காசுகளைக்கூட சிலர் கொடுத்து வந்தனர். என்னைப் போன்ற சிலருக்கு இணையம் மூலம் வர்த்தகம் முதலீடு என்பதே புரியாத நிலையில் இருந்தது.

சில காகிதங்களைக் காட்டி இதன் மதிப்பு ஒரு லட்சம் என்றார்கள். சில நாட்கள் கழித்து ஒன்றரை லட்சம் என்றார்கள். திடீரென வர்த்தகம் வீழ்ச்சி அதனால் அதன் மதிப்பு 75ஆயிரம் என்கிறார்கள். நமக்கு தேவைப் படும்போது பணமாக்கலாம் என்றால் முடியாதாம் நல்ல நிலையில் இருக்கும்போது விற்றால்தான் லாபமாம். கண்ட நேரத்தில் விற்றால் நட்டமாம். இப்படி சிலருக்கு அனுபவம். இதில் எத்தனை அவர்களுக்கு ஏற்பட்டதோ.. எத்தனை அவர்களாகவே சேர்த்துக் கொண்டதோ தெரியவில்லை.


நேற்று 170 ரூபாயாக இருந்த காகிதம் இன்று 30 ரூபாயாக மாறியிருக்கிறது. நேற்றும் அதை உபயோகப் படுத்தி ஒரு கடலை மிட்டாயும் வாங்க முடியாது. இன்றும் வாங்க முடியாது. உபயோகமாகாத பணம் எந்தப் பேரில் எந்த மதிப்பில் இருந்தால் என்ன.... வர்த்தகர்களுக்கு வேண்டுமானால் பங்கு வர்த்தகம் பட்டையைக் கிளப்பலாம். எங்களுக்கு பட்டைதான் போடும்.



அடுத்ததாக சோப்பு, பேஸ்ட், பவுடர் விற்பது... ஒரு பேஸ்ட், டூத் பேஸ்ட்தான் 75ரூபாயாம். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு இவ்வளவு லாபம் வரும் என்கிறார்கள். மக்களை சேர்த்து கொண்டே போனால் நம் காட்டில் பண மழை பொழியுமாமே. என்னைச் சந்தித்த ஒருவர், இனிமேல் எந்த வேலையுமே செய்யாவிட்டாலுமே மாதம் ஒரு லகரம் வருமாம். கம்பனியில் ஊக்கப் படுத்தி கார், வெளிநாட்டுச் சுற்றுலா எல்லாம் கூட்டிப் போகிறார்களாம். அது எப்படி ஒரு வேலையும் செய்யாதவருக்கு ஒரு லகரம் ஊதியம் தருவார்கள்.. அதற்கும் அவர் விளக்கம் கொடுக்கிறார். இதுவரையில் அவர் செய்த வேலைக்காக நிறுவனமே கொடுக்கும் ஊக்கத்தொகையாம். அவர் சேர்த்து விட்டவர்கள் முதலீடு செய்ய செய்ய இவருக்கு ஒரு பங்கு ஊக்கத்தொகையாக க் கிடைக்குமாம். இப்படியே நிறையப் பேருக்கு ஊக்கத்தொகை கொடுத்தால் உண்மையில் எவ்வளவுதான் உண்மையான முதலீடு? இவ்வளவு கமிஷன் போனால் அந்த பவுடர், பேஸ்ட்டின் உண்மையான விலைதான் என்ன..? இவர்கள் நேரடி மார்க்கெட்டில் நுழைந்தால் அதன் விற்பனை விலைகள் என்னவாக இருக்கும்..? இவர்கள் பொருடகளை விற்பதற்காக கூட்டம் சேர்க்கிறார்களா.. அல்லது அதன் போர்வையில் முதலீடுகளை சேர்க்கிறார்களா... அல்லது மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்களா....

இத்தனை பேருக்கு கொடுக்கும் ஊக்கத்தொகை புதிய சேர்ர்க்கையாளர்களுடையது என்றால் அந்தப் பணம் கமிஷன் கொடுக்க போதுமானதாக இருக்குமா. ... அப்படியென்றால் எதுதான் முதலீடு?


இதெற்கெல்லாம் எனக்கு மட்டுமல்ல... பலருக்கும் பதில் தெரியாமல்தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் பதில் சொல்லுவது போல் ஏதாவது பதிவுகள் இருந்தால் அதன் லிங்க் களைக் கொடுங்களேன்..

பின் குறிப்பு:-

மல்டி லெவல் மார்க்கெட்டிங், ஷேர் மார்க்கெட், இன்னும் பல முதலீடு செய்ய என்னை அனுகியவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தில் எழுதியவை. மற்றபடி இதனால் யாருக்காவது மன வருத்தம் இருந்தால் பொருத்தருளுங்கள்.

இது ஒரு மீள்பதிவு

Wednesday, January 7, 2009

மின்னணு உதவியுடன் நடந்த சாப்பாட்டுப் போட்டி.

கல்லூரியில் ஆண்கள் விடுதி பரபரப்பாக இருந்தது. இந்தவார இறுதியில் விடுதி தினம் கொண்டாடப் போகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளில் எல்லோரும் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். சிலர் கொண்டாடவே ஆரம்பித்திருந்தனர். அன்றைய தினம் விடுதியில் இட்லிசாப்பிடும் போட்டி நடப்பதாக இருந்தது.


போட்டிக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. ஒவ்வொரு குழுவிலும் இருவர். அவர்களுக்கு 25 இட்லிகள் கொடுக்கப் படும். அதனை வேகமாக சாப்பிட்டு முடிப்பவர் வென்றவராக அறிவிக்கப் படுவார். விடுதி சமையலறையில் அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுவந்தன. மாலை 7மணியளவில்பெயர் கொடுத்தவர்களை பார்த்தபோது ஏறக்குறைய 30அணியினர் இருந்தனர். விடுதி சமையலறையில் ஒரே நேரத்தில் 500 இட்லிகள் மட்டுமே தயார் செய்யும்வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரண்டுமுறை சமையல் செய்து போட்டி நடத்தலாம் என்றால் ஆறிய இடலி, சூடான இட்லி பாகுபாடு வருமே.. ஒரு சுற்றுக்கும் மற்றொரு சுற்றுக்கும் நடுவே அரைமணிநேரம் இடைவெளி கிடைக்கும்


போட்டி நடத்துபவர்கள் தங்கள் மூளையை கண்டபடி கசக்கி ஒருவழியைக் கண்டுபிடித்தனர். முதல்முறை இட்லி எடுத்தவுடன் முதல் சுற்றினை நடத்துவது ஒவ்வொருவரின் நேரத்தையை குறித்துக் கொள்வது. பின்னர் இரண்டாம் முறை நடத்துவது . அதில் போட்டியாளர்களின் நேரங்களை குறித்துக் கொள்வது ,, குறைவான நேரத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களை வெற்றியாளர்களாக அறிவிப்பது என முடிவானது. அனைத்து ஆண்டு மாணவர்கள் பிரதிநிதிகளும் ஒத்துக் கொண்டணர்.

முதல் சுற்றில் இறுதிஆண்டு-இளைஞர்பிரிவில் இருந்த எம்ஜியார்-சிவாஜி ஜோடி நான்கு நிமிடங்களுக்கு சில வினாடிகள் குறைவான நேரத்தில் 25 இட்லிகளையும் சாப்பிட்டுவிட்டனர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அஜித்-விஜய் ஆகியோர் நான்குநிமிடங்கள் மற்றும் சிலவினாடிகள் எடுத்துக் கொண்டனர். மற்றவர்கள் எல்லோருமே 5நிமிடங்களுக்கு மேலே எடுத்துக் கொண்டனர்.


அஜித்-விஜய் ஜோடிக்கு பயங்கர ஃபீலிங்ஸ். பின்னே.. சில வினாடிகளில் முதலிடம் பறிபோனது மனதை உலுக்கும் செய்திதானே.. அவர்களுக்கு அதிக நேரம் செலவானதன் காரணங்கள் நண்பர்களால் ஆராயப் பட்டது. உடனடியாக அவர்கள் அடுத்த முடிவு எடுத்தனர். அது
அவர்கள் அடுத்த சுற்றிலும் கலந்து கொள்ள முடிவு செய்தனர்..
ஏற்கனவே 25 இட்லிகளை சாப்பிட்டவர்கள் மீண்டும் 25 இடலி சாப்பிட உட்கார்ந்தால் அதிர்ச்சியாக இருக்காதா..

அந்த அதிச்சியிலேயே அவர்கள் கலந்து கொள்வதை மற்றவர்கள் எதிர்க்கவில்லை. அவர்களும் உட்கார்ந்தனர். சாப்பிட்டனர். ஆனால் இந்தச் சுற்றில் அவர்கள் ஏறக்குறைய நான்கு நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தனர். அதாவது இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை அவர்கள் கைப்பற்றினர்.


அவர்கள் முதலிடம் பெறாவிட்டாலும் அவர்களது இந்த பெர்ஃபாமன்ஸ் பார்த்து விடுதியே அதிர்ந்துதான் போனது.

பின்குறிப்பு:-
1..50 இட்லிகளை சாப்பிட்டுவிட்டு தாகசாந்திக்கு வேறு கொஞ்சம் குளிர்பானம் குடித்தனர்.
2.. போட்டியின்போது எலக்ட்ரானிக் வாட்ச் உபயோகப் படுத்தப் பட்டது. தமிழில் மின்னணு கடிகாரம்.

===========================================

இது ஒரு மீள்பதிவு, வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் வருவதற்கு வெகுநாட்கள் முன்பே (7-1-1009) எழுதப்பட்டது.

Monday, January 5, 2009

கோழையா? அஹிம்சாவாதியா? பொறுமைசாலியா?

கத்தியின்றி இரத்தம் இன்றி போராடும் முறை என்று அஹிம்சை முறயைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அஹிம்சை என்பது முற்றிலும் வேறு பட்ட ஒன்று.

அதில் ரத்தம் அளவே இல்லாமல் சிந்தப் பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரப் போரிலேயே எத்தனையோ தியாகிகள் தங்கள் இரத்தத்தையும், இன்னுயிரையும் தந்திருக்கின்றனர். அவர்கள் சிந்திய இரத்தத்தைப் பார்த்து அதிகாரம் கொண்டிருப்பவர்கள் தங்கள் மனசாட்ட்சியால் ஹிம்சை செய்யப் பட்டு நரக வேதனை அடைந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு கட்டாயப் படுத்தப் பட்டனர். மீண்டும் ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அஹிம்சை என்பது கத்தியும் ரத்தமும் இன்றி போராடும் முறையா...? இரத்தம் சிந்துவதைப் பற்றி கவலையே படாத லட்சிய வாதிகளின் போராட்டமுறையா...?



ஆயுதம் எடுத்துப் போராடுவதற்கு வெறும் உடல்வலிமை மட்டும் போதும். ஆயுத வீரர்களுக்கு வழி நடத்த கொஞ்சம் போர்தந்திரங்கள் தெரிந்தால் போதும். ஆனால் அஹிம்சை முறையில் போரிடுவதற்கு வன்முறையைத்தாங்கும் உடல் வலிமையும், மன வலிமையும் மிகமிக அவசியம். அவமானங்களைத் தாங்கும் உள்ளத்தெளிவும் அவசியம். அந்த அளவு உடல் வலிமையும் மன வலிமையும் உள்ளத்தெளிவும் இல்லாதவர்கள் அஹிம்சை முறையைப் பின் பற்றுவதற்கே தகுதி இல்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.


பாட்ஷா படத்தில் பாட்ஷாவை கட்டி வைத்து அடிப்பார்கள். ஆனால் பாட்ஷா மிக அமைதியாக சிரித்துக் கொண்டு இருப்பார். காந்தி, யேசு போன்றோரையெல்லாம் உவமைப் படுத்துப் பாடுவார்கள். அந்தப் பாட்டிற்கு முன் பாட்ஷா தம்பிக்காக கெஞ்சுவார். அவரை கட்டி வைக்க அழைத்துச் செல்லப் படும்போது கொதித்தெழும் கூட்டாளிகளை ஒரு விரல் அசைவில் நிறுத்தி வைப்பார். அடிக்கப் படும்போது கூட வலியைத்தாங்கி கொண்டு சிரிப்பார். அடி வாங்கி ஓய்ந்த பிற்கு கூட வலியுடன் சிரிப்பார். அனைத்து அடிகளையும் வாங்கிக் கொண்டு நிற்கும் வல்லமை படைத்தவராக நாயகனைக் காட்டுவார்கள்.

கீழே உள்ள காட்சியில் 3நிமிடம் கழித்து வருகிறது, மேற்கண்ட காட்சிகள்



அப்படி அமைதியாக பொறுமை காத்தவர் பொங்கி எழும் காட்சியை கீழே பாருங்கள்



அஹிம்சையை பின்பற்ற நினைப்பவர்களின் அடிப்படைத்தகுதிகளை மிக அழகாக பாட்ஷா படத்தில் பாட்ஷாவைக் கட்டி வைத்து அடிக்கும் போது வரும் காட்சிகளில் அற்புத்மாக விளக்கியிருப்பார்கள்.


http://www.lazygeek.net/images/jaggubhai2.jpg

திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும்.........

திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வரும் ஒரு நிகழ்வு. வெகுசிலருக்கு வராமல் கூட இருக்கலாம். வராமல் போனது கூட ஒரு நிகழ்வாகவே கருதப் படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அது. சிலநேரங்களில் அது பெற்றோரால் நிச்சயக்கப்படும் வகையிலும் சில நேரங்களில் அவர்களாகவே நிச்சயிக்கப் படுவதாகவும் அமைகிறது.

அவர்களாகவே முடிவு செய்வது பற்றி நாம் பேசப் போவதில்லை. பெற்றோரால் உறுதி படுத்தப் படும் திருமணங்களிலிருந்து ஒரு நிகழ்வினைப் பற்றி மட்டும் பார்ப்போம். பல இடங்களில் ஆணும் பெண்ணும் நிச்சயத்திற்கு முன் பேசுகின்றனர். பெரும்பாலும் பேச ஆசைப் படுகின்றனர். இப்படி பேசுவதால் ஏதாவது நன்மை இருக்கிறதா? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிலநிமிடங்களில் எவ்வாறு அது சாத்தியம்?

பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள். இதில் அத்துமீறலுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர புரிந்து கொள்வது என்பது.............


ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதும் சிறந்தவர்களாகக் காட்டிக் கொள்வதும் மட்டுமே உண்மையில் நடைபெறுகிறது. தங்களின் ரசனைகளை வெளிக் காட்டிக் கொள்கிறார்களா.. என்றால் இல்லை. எல்லாவற்றிலும் பெஸ்ட். என்ற நிலைமையிலேயே பழகுகின்றனர். வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே நிற்கிறது. திருமணத்திற்கு பின் ஏற்படக்கூடிய ஒரு சஸ்பென்ஸ் ப்போய்விடுவதால் பல நேரங்களில் சளிப்பு மட்டுமே மீந்து போகிறது. சின்ன குறைகள் வெளியே தெரியும் போது அது சண்டையாய் மாறி திருமணத்தையே முறித்துவிடக்கூடிய சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

என்னமோ போங்க...........

Saturday, January 3, 2009

மூன்றுமணி நேரம் அடங்கி இருக்கும் ஒருவயது குழந்தைகள்

உங்கள் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு வயதில் குழந்தைகள் இருக்கிறார்களா.... அவர்கள் என்றாவது ஒரு மூன்று மணி நேரம் அமைதியாக ஒரே இடத்தில் இருந்து பார்த்திருக்கிறீர்களா,,,

நானும் பார்த்ததில்லை. அப்படி ஒரு முப்பது குழந்தைகளாவது அமர்ந்திருப்பார்கள் என்ற எண்ணம் வரக்கூடிய சூழல் எனக்கு ஏற்பட்டது.

அன்று வேலைநிமித்தம் பொழுதுசாயும் வேலையில் ஒரு தேநீர் சாலையில் தேநீர் அருந்தும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சாலைக்கு அருகில் ஒரு திரையரங்கம் இருந்தது. அந்த நேரத்தில் திரைப்படம் முடிந்து மக்கள் சாரைசாரையாகச் சென்று கொண்டிருந்தனர்.

இப்பொழுதெல்லாம் வெகு அபூர்வமாகவே திரையரங்கிற்குச் செல்கிறோம். அப்படியே போனாலும் இரு சக்கரவாகனத்தில் சென்று படம் முடிந்த உடனே கிளம்பிடுவோம். பள்ளியில் படிக்கும் காலத்திலும் இருசக்கரவாகனமே.. மிதிவண்டி. அதனால் இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

அது ஒரு கிராமத்தில் உள்ள திரையரங்கு. கிராமம் என்றால் வாரம் ஒருமுறை சந்தை நடக்கும். அந்த அளவு சற்றே பெரிய கிராமம்தான். சனி, ஞாயிறுகளில் மதிய காட்சியுண்டு. தேநீர் அருந்திக் கொண்டே அந்தக் கூட்டத்தைப் பார்த்தபோது பார்வையில் பட்டவிஷயம் இதுதான். நிறைய தாய்மார்கள் தங்கள் ஒரு அல்லது இரு வயது குழந்தைகளுடன் வந்து படம் பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தனர். எப்படியும் இருபது முப்பது குழந்தைகளாவது இருப்பார்கள். அனைவரும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான்.

கண்டிப்பாக குளிர்சாதனவசதி செய்யப் பட்ட அரங்கம் கிடையாது அது. ஒரு சிலர் தங்கள் கணவருடன் வந்திருந்தனர். பொதுவாக குழந்தைகள் அரை மணிநேரம் அடங்கி இருந்தாலே அது ஆச்சர்யப்படத்தக்க விஷ்யம் தான். இவர்கள் எப்படி மூன்று மணிநேரம் குழந்தையுடன் படம் பார்த்திருப்பார்கள்.? உங்களுக்கு ஏதாவது ரகசியம் தெரியுமா..

சாதாரணமாக கல்யாண வீடுகளிலோ, கோயில்களிலோ எப்படியும் குழந்தைகள் ஏதாவது ஒன்றாவது அழுது கொண்டும் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த குழந்தைகள் எப்படி அமைதியாக இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பின் திரைப்படம் விட்டுவரும் கூட்டங்களைப் பார்த்தால் எப்படியும் பல தாய்மார்கள் குழந்தைகளுடன் படம்பார்த்துவிட்டு வருகிறார்கள். எப்படி இது சாத்தியம்...? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்................

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails