Thursday, October 29, 2009

எத்தனை தாவணி? ஒரு புலனாய்வு

ஒரு ஊரில ஒரு சின்னப் பையன் இருந்தான். அவன் சின்னப் பையனாக இருக்கும்போதே நற்பணி மன்றம் ஒன்றில் உறுப்பினராக இருந்து வந்தான்.
அந்த நற்பணி மன்றத்து ஆட்கள் எல்லாம் கொஞ்சம் பெரியவங்க.  அவங்க செய்யற நற்பணிகளில் முக்கியமான நற்பணி  அவர்களின் அபிமான நாயகன் நடித்த படம் வரும்போது  சைக்கிள் டயர் நடுவில் குச்சிகள் வைத்து அதன்மேல் பழைய தினத்தந்தி பேப்பர்கள் போட்டு ஒட்டி அதற்கு மேல் வெள்ளை நிற தாளை ஒட்டி அதன்மேல்  தங்கள் அபிமான நாயகரைப் புகழ்ந்து நான்கு வரிகள் எழுதி  தங்கள் மன்றத்தின் பெயரை எழுதி தங்கள் பெயரை எல்லாம் வரிசையாக எழுதி திரையரங்கில் வைத்து தங்கள் பெருமையை ஊருக்கே சொல்லிக் கொள்வார்கள்.

அந்தச் சின்னப் பையனின் எழுத்துக்கள் அழகாக இருக்கும் இருந்தது. அதனால் அவன் தான் இந்த எழுத்துக்களை பிரஷ் பிடித்து பவுடர் நீலத்தை குழைத்து எழுதுவான். அதனால் அவனை பிரதான எழுத்தாளனாக வைத்திருந்தார்கள். அவனுக்காக இலவசமாக அந்தப் படத்திற்கு டிக்கட் கிடைக்கும். மன்றத்தின் மூத்த உறுப்பினர்களோடு சேர்ந்து அவன் படம் பார்ப்பான்.

பிற்காலத்தில் அவன் பழைய எம்ஜியார், சிவாஜி படங்களில் வரும் பன்ச் வசனங்களை தன் அபிமான நாயகனுக்காக எழுதிவந்தான். அவன் புகழ் எல்லோரிடமும் பெரிய அளவில் வளர்ந்து வந்தது.

இவ்வாறாக அவன் எழுத்தை மற்றவர்கள் படிப்பதற்காக பிறர் பார்வையில் வைப்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு செயலாக மாறியது.  அவன் பள்ளியில் படித்த காலங்களில் அவன் ஒரு ஆங்கிலத்தேர்வில் எழுதிய கடிதத்தை ஆசிரியர் சிறப்பாக பாராட்டிப் பேசினார். அவன் தேர்வு எழுதும் காலத்தில் எட்டாம் வகுப்பு வரையில் ஆங்கில் தேர்வு என்பது வினாத்தாளிலேயே விடைகளை குறித்துத் தரும் வகையில் இருக்கும். ஆங்காங்கே இரண்டொரு வார்த்தைகளை மட்டும் எழுதினால் போதும். வார்த்தைகளை முன்பின்னாக மாற்றிப் போட்டு பதில் எழுதும் வித்தையை அவனது ஆசிரியர்கள் சிறப்பாக சொல்லிக் கொடுத்திருந்தார்கள்.  அவர்கள் தொடர்ச்சியாக எழுதுவது என்பது அந்தக் கேள்வித்தாளின் கடைசிப் பக்கத்தில் எழுதும் கடிதம் மட்டுமே.

அவன் வேறொரு வழிகாட்டிப் புத்தகத்தில் மனனம் செய்து எழுதி வைக்க அவனது ஆசிரியர் சிறப்பாக பாராட்டிப் பேசிவிட்டார்.  அடுத்த தேர்வில் அந்த பாராட்டு எதிரொலித்தது. பிற மாணவர்கள் அவனது எழுத்தைத் தேர்வறையிலேயே படிக்க ஆசைப்பட  அங்கேயே அவனது எழுத்துக்கள் நிறையப் பேரால் படிக்கப் பட அப்போதே அவன் ஒரு எழுத்தாளனாக பரிமளிக்க ஆரம்பித்தான்.

பள்ளியில் தேர்வறையில் அவனது எழுத்துக்கு ரசிகர்கள் அதிகரித்துவந்தனர்.

அவன் ஒருவழியாக கல்லூரிக்குச் சென்றான். அந்தக் கல்லூரியில் இவனை போலவே  சில ஆட்கள் இருக்க அவர்களோடு சேர்ந்து  தனது இலக்கிய கலை உலக வாழ்க்கையினை தொடங்க ஆரம்பித்தான்.  அங்கு அவன்  மீண்டும் பழைய எம்ஜியார், சிவாஜி படங்களின் உதவியை நாட ஆரம்பித்தான். அந்தப் படங்களில் வந்த வசனங்களை மீண்டும் உபயோகப் படுத்த ஆரம்பித்தான். அதனால் அவன் அங்கு கவிஞர்களின் வரிசையில் இடம்பிடிக்க ஆரம்பித்தான். ஆர்டர்களின் பேரில் கவிதைகள் எழுதிக் கொடுக்க ஆரம்பித்து மீண்டும் ஒரு முண்ணனி எழுத்தாளனாக ஆரம்பித்தான்.

அந்த நேரத்தில் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு கல்லூரிப் பத்திரிக்கை ஆரம்பித்து எழுத ஆரம்பித்தார்கள் .அப்போது கல்லூரியின் பெண்கள்விடுதியின் வாசலில்  மாலைவேலையில் இரவு உணவுக்குப்பின் ஒன்பது மணிவரை பெண்கள் உலவுவார்கள். அப்போது அவர்களில் எத்தனை பேர் சுரிதார் அணிகிறார்கள், எத்தனை பேர் தாவணி, எத்தனை நைட்டி என்ற கணக்கினைத்தருமாறு பணிக்கப் பட்டான்.  அதனை அவனும் அவன் நண்பன் ஒருவனுமாக இருவரும் அந்தப் பணியில் இறங்கினார்கள். அவர்கள் இருவரும் ஒரு பாதுகாப்பான் இடத்தில் அமர்ந்து கொண்டு கண்க்கை எழுத ஆரம்பித்தனர். அவர்கள் இருந்த இடத்தில் பல ரகசிய விவரங்கள் கிடைக்க ஆரம்பித்தன.

அதையெல்லாம் சேர்த்து எழுத ஆரம்பிக்க அவர்கள் இருவரும் பரபரப்பான புலனாய்வு எழுத்தாளர்களாக மாற ஆரம்பித்தனர். பிற்காலத்தில் சுவர் பத்திரிக்கையாளர்களாக மாறிய போது கூட  கிசுகிசுக்கள் புலனாய்வு எழுத்துக்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தன.

ஒருகுறிப்பிட்ட காலக்கட்டத்தில் அவன் கல்லூரியைவிட்டே வெளியே வந்தான்.  தனது ஊருக்கே வந்து தனது தொழிலைப் பார்க்க ஆரம்பித்தான்.  சில காலம் கழித்து அரசு வேலையும் அங்கேயே கிடைக்க அவன் முழுக்க தனது தொழிலில் மூழ்கிவிட்டான்.

அவன் பணி செய்யும் இடத்தில் கணினி ஒன்று நிறுவப் பட்டது. நிறுவப்பட்டபோது இவனும் அருகில் நிற்க கணினியை எப்படி திறப்பது மூடுவது போன்ற செயல் விவரங்கள் இவன் முன்னிலையிலேயே சொல்லப் பட்டன.  இவனுக்கு எல்லா விவரங்கள் சொல்லப் பட்டுவிட்டதாக நினைத்த அமைச்சுப் பணி செய்பவர்கள்  அவனிடம்  அவ்வப்போது  சில சந்தேகங்கள் கேட்க ஆரம்பித்தனர். அவனுக்கோ தெரியாது என்று சொல்லக்கூச்சம்.

உடனடியாக ஒரு கணிணியை வீட்டில் வாங்கி வைத்தான். அதில் மின்னஞ்சல் முகவரி ஒன்றைத்துவக்கி கல்லூரியில் உடன் படித்தவர்கள் சேர்ந்திருந்த குழுவில் இணைந்து கொண்டான். பின்னர் கணினி மூலம் அடிக்கடி விளையாட ஆரம்பிக்க வீட்டில் உள்ளவர்களும் இவனை கணினிக்காரனாக பார்க்க ஆரம்பித்தனர்.

ஆனால் அவன் கணினியில் பலநேரங்களில் விளையாட்டுகளில்தான் மூழ்கி இருப்பான். சில மாதங்கள் கழித்து அவனது தம்பி விடுமுறையில் வீட்டிற்கு வந்தவன் கணிணியில் மூழ்கியவன் சில மணி நேரங்களுக்குப் பிறகு எழுந்துவிட்டான். இவன்  கணினியில் அமர்ந்து உலாவியைத்திறக்க அது ஆர்குட் பக்கத்தினைத் திறந்தது.  அந்த கணக்கிலேயே ஆர்குட்டை சுற்றிப் பார்க்க  ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வில்  அவனும் புதிதாக ஒரு கணக்கினைத்துவக்கினான்.

ஆர்குட்டில் அவன் பலரையும் சந்தித்தான். அவர்களில் முக்கியமானவர் மரு.புருனோ.  அவர் சில லின்க்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவனும் மறுமொழி கொடுத்தான். சில நாட்களில் அவனை வலைப்பூ ஆரம்பிக்க அழைத்தார். அப்போது அவனுக்குத் தெரிந்தது அவரது வலைப்பூ மட்டுமே. அவரது வலைப்பூவிற்கு வரும்போது கூட கூகிள் தேடுதளத்தில் பயணங்கள் என்று எழுதித் தேடியே வருவான்.  சில நாட்களில் அவனும் புருனோவின் ஆலோசனைப் படி ஒரு வலைப்பூவினைத் தொடங்கி  எழுத ஆரம்பித்தான். கூகிள் மூலமாக அங்காங்கே தேடி சில காப்பி பேஸ்ட் போட்டான். பின்னர் அவன் சொந்தமாகவே பல விஷயங்கள் எழுத ஆரம்பித்தான். கொஞ்சம் சீரியஸாக அது போய் கொண்டிருந்தது.


பின்னர் அவரே ஒரு தொடர்பதிவிற்கும் அழைப்பு விடுத்தார். அவன் அப்போது எழுதி வந்த பூவில் அந்த தொடர் பதிவினை போட அவனுக்கு விருப்பம் இல்லாததால  தனியாக இன்னொரு பூவினை ஆரம்பித்தான். அந்தப் பூவிற்கு தனது  பழைய கனவுகளை அழைத்துப் பார்க்கும் வகையில் பெயர் வைத்தான்.

பின்னர் மரு. புருனோவிடம் இதைதெரிவித்த போது நன்றாக இருக்கிறது. தமிழ்மணம்,தமிழீஷில் இணைக்குமாறு சொல்லவும் இவனும் அதற்கான முயற்சிகளை எடுக்க தமிழ்மணம் மற்றும் தமீழீஷ் தளங்களில் அடியெடுத்து வைக்கிறான். பின்னர் நடந்த கதைகளைத்தான் நாம் அவ்வப்போது பதிவேற்றிவிடுகிறோமே.....,

இந்த இடுகைக்கு புள்ளிவைத்து கொடுத்தவர் இளைய பல்லவன் அவர்கள் இந்த இடுகை மூலமாக. நானும் இன்னொரு புள்ளிவைத்துவிட்டேன்.  இதைத் தொடர திரு. Jawahar
அவர்களை அழைக்கிறேன்.

13 comments:

  1. நன்றி தல !

    ஆஹா தல நீங்க ஒரு தலை சிறந்த ..... போல இருக்கே!! இன்னும் ஒரு தொடருக்கு அழைக்கிறேன். வாங்க.

    ReplyDelete
  2. @Starjan ( ஸ்டார்ஜன் )
    @T.V.Radhakrishnan
    @இளைய பல்லவன்

    நன்றி நண்பர்களே...,

    ReplyDelete
  3. // ஆ.ஞானசேகரன் said...

    நல்லாயிருக்கு//

    நன்றி தல..,

    ReplyDelete
  4. அருமையான ஆராய்ச்சி ....

    எங்க போறீங்க ?


    என் பக்கமும் வாங்க ....

    கட்டபொம்மன்

    ReplyDelete
  5. // முரளிகண்ணன் said...

    டெம்பிளேட் கலக்கல்//

    நன்றி தல

    ReplyDelete
  6. // கட்டபொம்மன் said...

    அருமையான ஆராய்ச்சி ....

    எங்க போறீங்க ?


    என் பக்கமும் வாங்க ....

    கட்டபொம்மன் //

    கண்டிப்பாக தல..,

    ReplyDelete
  7. ஹஹஹஹஹ.. அப்ப அது நீங்கதானா??? நல்லாருக்கு.

    அது ஏன் சார் சட்டையை மாத்துறமாதிரி அடிக்கடி டெம்பெளேட்டை மாத்துறீங்க?

    ReplyDelete
  8. // நாஞ்சில் பிரதாப் said...

    ஹஹஹஹஹ.. அப்ப அது நீங்கதானா??? நல்லாருக்கு.

    அது ஏன் சார் சட்டையை மாத்துறமாதிரி அடிக்கடி டெம்பெளேட்டை மாத்துறீங்க?//

    நன்றி தல..,

    கற்றுக் கொள்ளும் முயற்சிகள்தான் தல..,

    ReplyDelete
  9. குசும்பு புடிச்ச ஆளுயா நீரு.இந்தக் கொடுமைக்கு உம்ம நான் பழி வாங்க வேணாம்?ஏன் ப்ளாக் பக்கம் வந்தா புது கொடும ஒண்ணு அரங்கேறி இருக்கு.வந்து அனுபவிசுட்டு பொறும.உமக்கு தண்டன அது தான். :)

    ReplyDelete
  10. // ILLUMINATI said...

    குசும்பு புடிச்ச ஆளுயா நீரு.இந்தக் கொடுமைக்கு உம்ம நான் பழி வாங்க வேணாம்?ஏன் ப்ளாக் பக்கம் வந்தா புது கொடும ஒண்ணு அரங்கேறி இருக்கு.வந்து அனுபவிசுட்டு பொறும.உமக்கு தண்டன அது தான். :)//

    விதியின் சதி.., இப்போதுதான் வரமுடிந்தது.உடனே வருகிறேன்..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails